இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது: பிரதமர் மோடி

இந்தியாவில் சாதி, மதத்தின் பெயரில் பிரிவினை உள்ளதா? என்பது தொடர்பாகவும், இந்திய ஜனநாயகம் குறித்தும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் பிரதமர் மோடி அசத்தலாக பதிலளித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றார். நேற்று முன்தினம் நியூயார்க்கில் ஐநா தலைமையகத்தில் நடந்த யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதன்பிறகு நேற்று வாஷிங்டனில் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். இறுதியாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு அமெரிக்க அதிபர் ஜோபைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தனர். மேலும் பிரதமர் மோடிக்கு 19 குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து வெள்ளை மாளிகையில் குவிந்திருந்த இந்தியர்கள், அமெரிக்கர்கள் மத்தியில் பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் இருநாடுகளின் உறவு பற்றி பெருமையாக பேசினார். இதையடுத்து இரு தலைவர்கள் சந்திப்பு இருநாடுகளின் வளர்ச்சிக்கு தேவையானது பற்றி விவாதித்தனர்.

அதன்பிறகு அமெரிக்க அதிபர் ஜோபைடன், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது இருவரிடமும் பத்திரிகையாளர்கள் கேள்விகள் கேட்டனர். அப்போது ஜனநாயகம் குறித்து பிரதமர் மோடியிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி, ‛‛இந்தியா மற்றும் அமெரிக்காவின் டிஎன்ஏவில் ஜனநாயகம் உள்ளது. ஜனநாயகம் தான் இருநாடுகளிலும் முதன்மையானது. அதன் கீழ் தான் நாம் வாழ்கிறோம். ஜனநாயகத்தின் அடிப்படையில் அரசியலமைப்பு சட்டம் எழுதப்பட்டுள்ளது” என பதிலளித்தார்.

மேலும் பிரதமர் மோடி கூறுகையில், ‛‛இந்தியாவில் சாதி, மதம் என் அடிப்படையிலான பாகுபாடு என்ற கேள்விக்கே இடமில்லை. அனைவருக்கும் ஒத்துழைப்பு, அனைவருக்கும் வளர்ச்சி, அனைவருக்குமான முயற்சி என்ற நம்பிக்கை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்ந்து முன்னோக்கி எடுத்து செல்லப்படும்” என்றார்.

இந்த வேளையில் பிடிஐ செய்தி நிறுவனம் சார்பில், ‛‛பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால் பற்றி இருநாடுகளும் பேசி வருகின்றன. ஆனால் செயல்படுத்துவதில் குறைபாடு உள்ளது. அதோடு வளர்ந்த நாடுகளில் இருந்து வளரும் நாடுகளுக்கு தொழில்நுட்ப பரிமாற்றம், நிதி பரிமாற்றம் இல்லாமல் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதற்கு பிரதமர் மோடி, ‛‛சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது நம்பிக்கைக்குரிய ஒன்றாகும். இயற்கையை சுரண்டுவதில் இருந்து எங்களுக்கு விருப்பம் இல்லை. இந்தியா சுற்றுச்சூழலை பாதுகாப்பது மட்டுமல்ல உலகை பாதுகாக்கவும் பாடுபட்டு வருகிறது. இதற்கான உலகளாவிய முயற்சிகளை நாங்கள் எடுத்து வருகிறோம்” என்றார்.