குஜராத்தில் கூகுளின் சர்வதேச பின்டெக் மையம்: சுந்தர் பிச்சை அறிவிப்பு!

குஜராத்தில் கூகுள் நிறுவனம் தனது பின்டெக் மையத்தை திறக்க இருப்பதாக பிரதமர் மோடியை சந்தித்த பிறகு சுந்தர் பிச்சை அறிவித்தார்.

அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் தனியாக ஆலோசனை நடத்தினர். பிறகு, இரு நாடுகளின் மூத்த அதிகாரிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து அமெரிக்க பாராளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். தொடர்ந்து இந்திய மற்றும் அமெரிக்க தொழில்நிறுவன சி.இ.ஓக்கள் கூட்டம் வெள்ளை மாளிகையில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் இணைந்து பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் சத்திய நாதெல்லா, கூகுள் (ஆல்பபெட்) நிறுவனத்தின் சி.இ.ஓ சுந்தர் பிச்சை, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், நாசா நிர்வாகி பில் நெல்சன், ஓப்பன் ஏஐ சி.இ.ஓ சாம் ஆல்ட்மேன், ஆப்பிள் சி.இ.ஓ டிம் குக், ஃப்ளெக்ஸ் நிறுவன சி.இ.ஓ ரேவதி அத்வைதி, ஏ.எம்.டி நிறுவன சி.இ,ஓ லிசா சு, துல்கோ எல்எல்சி நிறுவனர் தாமஸ் டல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து பேசிய கூகுள் சி இ ஓ சுந்தர் பிச்சை, டிஜிட்டல் இந்தியா குறித்த மோடியின் தொலைநோக்கு பார்வை பாரட்டுக்குரியது. குஜராத்தின் கிப்ட் சிட்டியில் கூகுளின் சர்வதெச பின்டெக் செயல்பாட்டு மையம் அமைக்கப்படும். பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பு கிடைத்தது பெருமை அளிக்கிறது. இந்தியாவில் டிஜிட்டல் நிதியில் 10 பில்லியன் டாலர் கூகுள் நிறுவனம் முதலீடு செய்ய இருக்கும் தகவலை பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்” என்றார்.