அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை: பிரதமர் மோடி

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என பிரதமர் மோடி கூறினார்.

இந்திய பிரதமர் மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது அவர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பாதுகாப்பு, வர்த்தகம் உள்பட பல்வேறு ஒப்பந்தங்கள் இந்த சந்திப்பின் போது கையெழுத்தாகியுள்ளது. இந்நிலையில், அமெரிகாவின் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசுகையில், அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்றார். மேலும், இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களை திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு நன்றி என்றார்.

இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பைடன் அடுத்த கட்டத்துக்கு எடுத்த செல்ல முயல்கிறார். இந்தியர்களின் பணிக்காக வழங்கப்படும் எச்1 பி விசாவை அமெரிக்காவிலேயே புதுப்பிக்கலாம். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக அங்கேயே புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என பிரதமர் மோடி கூறினார்.

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்கிழமை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தினம் சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரை ஆற்றினார். அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டு சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார். பிரதமராக பதவி ஏற்ற பிறகு எகிப்து நாட்டிற்கு முதல் முறையாக பிரதமர் மோடி பயணம் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.