அவதூறு வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருந்த இரண்டு ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இன்று குஜராத் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு தீர்ப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவதூறு வழக்குக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையா என்று ஆச்சரியக் குரல்கள் எழுந்தன. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்துப் பேசினார். “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி” என்று அவர் பேசியிருந்தார்.
ராகுல் காந்தி மோடியை விமர்சிக்க நினைத்திருந்தாலும் அவரது பேச்சால் மோடி சமூக மக்கள் அதிருப்தி அடைந்தனர். ராகுல் பேசிய கருத்துகளுக்காக குஜராத் முன்னாள் அமைச்சரும் பாஜக எம்.எல்.ஏவுமான புர்னேஷ் மோடி வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் 23 மார்ச் 2023 அன்று தீர்ப்பு வழங்கியது. அதில் ராகுல் காந்தி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 499 மற்றும் 500-ன் படி ராகுல் காந்தி அதிகபட்ச தண்டனையான 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 15,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார். உடனடியாக அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. தண்டனை அறிவிக்கப்பட்டதால் ராகுல் காந்தியின் எம்பி பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டது.
அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தை ராகுல் காந்தி நாடினார். கடந்த மே மாதம் நடந்த விசாரணையின்போது, அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சாக், கோடைகால விடுமுறைக்குப்பின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று வெளியிட்ட வழக்கு அட்டவணையின்படி, ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கில் இன்று (ஜூலை 7) 11 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது. இதில் அவதூறு வழக்கு தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டால், ராகுல் காந்தி மீண்டும் தனது எம்.பி. பதவியை திரும்பப்பெறும் வாய்ப்பு ஏற்படும். அதே சமயம் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டால் அவர் சிறை செல்ல நேரிடும். எனவே இந்த வழக்கின் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் கவனம் பெற்றுள்ளது.
