பிரதமர் மோடிக்கு முழு சைவ விருந்து அளித்த ஐக்கிய அரபு அமீரக அதிபர்!

பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பிரான்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரின் அழைப்பின் பேரில் பிரதமர் ஒரு நாள் பயணமாக இன்று அபுதாபி சென்றுள்ளார். அங்கு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரத்தின் அதிபர் முகமது பின் சையத் அல் நஹ்யான் விமான நிலையத்தில் வரவேற்பு அளித்தார். இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபரும், அபுதாபி ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் சமீத் அல் ரஹ்யானை சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதற்கிடையே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர், பிரதமர் மோடிக்கு முழு சைவ உணவு விருந்து அளித்துள்ளார். கஸ்ர்-அல்-வதன் ஜனாதிபதி மாளிகையில் பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கப்பட்டது. விருந்தில் முதலில், கோதுமை மற்றும் பேரீச்சம்பழ சாலட் உடன் கரிம காய்கறிகளை தொடர்ந்து, மசாலா சாஸில் வறுக்கப்பட்ட காய்கறிகளை ஸ்டார்டர்களாக பறிமாறப்பட்டது. மேலும் உணவு பட்டியலில் கறுப்புப் பருப்பும், கோதுமை, காலிஃபிளவர் மற்றும் கேரட் தந்தூரி ஆகிய உணவு வகைகளை முக்கிய உணவாக வழங்கப்பட்டன. இனிப்புக்காக உள்ளூர் பருவகால பழங்கள் அளிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் அனைத்து உணவுகளும் சைவ உணவுகள் மற்றும் தாவர எண்ணெய்களால் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் பால் அல்லது முட்டை பொருட்கள் இல்லை என்றும் விருந்துக்கான மெனு கார்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக துபாயில் உள்ள உலகின் உயரமான கோபுரமான புர்ஜ் கலிஃபாவில் இந்தியாவின் தேசியக் கொடியின் மூவர்ணங்களால் ஒளிரூட்டப்பட்டது. இது காண்போரை வியக்க வைத்தது. இதைத்தவிர, பிரதமர் மோடியின் முகமும் புர்ஜ் கலிஃபாவின் கோபுரத்தில் ஒளிரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரதமர் மோடியின் படத்தின் கீழ் மதிப்பிற்குரிய நரேந்திர மோடிக்கு நல்வரவு என்ற வாசகங்களும் இடம்பெற்றுள்ளன.

ஐக்கிய அரபு எமிரேட்சின் ஒருநாள் பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.