சீனாவின் வூகான் ஆய்வகத்துக்கான நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா!

சீனாவில் உள்ள வூகான் நுண்ணுயிரியல் மையத்தின் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பை உறுதிசெய்யும் நிலைகள் குறித்த அறிக்கைகளை தர மறுத்ததால், நிதியுதவியை நிறுத்தியது அமெரிக்கா.

அமெரிக்க அதிபர் பைடன் தலைமையிலான நிர்வாகத்தில், சுகாதாரம் மற்றும் மனித சேவைக்கான துறை, வூகான் ஆய்வு மையத்துக்கு அனுப்பியிருக்கும் அறிக்கையில், தங்களது நிதியுதவியைப் பெறும் ஆய்வகங்களின் பட்டியலிலிருந்து வூகான் ஆய்வகம் நிரந்தரமாக நீக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வூகான் ஆய்வகம், அமெரிக்காவின் சுகாதாரத் துறையால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆய்வுக்குட்படுத்தப்பட்டதில், அங்கிருக்கும் வசதிகள் அமெரிக்க வழிகாட்டு நெறிமுறைகளுக்கு இணக்கமாக இல்லை என்று தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், அமெரிக்காவிலிருந்து மேற்கொண்டு எந்த நிதியுதவியும் இந்த ஆய்வகத்துக்குக் கிடைக்காது என்பது உறுதி செய்யப்படுகிறது. இந்த ஆய்வகத்துக்கு ஏற்கனவே 2020ஆம் ஆண்டு முதல் தேசிய சுகாதார மையத்திடமிருந்து நிதியுதவி வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது.