இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது: புதின்

இப்போதுள்ள சூழ்நிலையில் எங்களால் போரை நிறுத்த முடியாது. உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்று அதிபர் புதின் கூறியுள்ளார்.

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்ட ரஷ்யா, முக்கிய பகுதிகளை கைப்பற்றியது. ஆரம்பத்தில் உக்ரைன் தரப்பு பின்னடைவை சந்தித்த நிலையில், அதன்பின்னர் எழுச்சி பெற்று பதில் தாக்குதல்களை தீவிரப்படுத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகிறது. அத்துடன் ரஷ்யாவை குறிவைத்தும் தாக்கத் தொடங்கி உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வந்து உக்ரைனில் அமைதி திரும்ப ஆப்பிரிக்க நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. இந்த அமைதி திட்டம் குறித்து செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் ஆப்பிரிக்க தலைவர்கள், ரஷ்ய அதிபர் புதின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புதின், ஆப்பிரிக்க முன்முயற்சி உக்ரைனில் அமைதிக்கு ஒரு அடிப்படையாக இருக்கலாம், ஆனால் உக்ரைன் தாக்குதல் நடத்துவதால் அந்த அமைதி முயற்சியை செயல்படுத்துவது கடினம் என்றார்.

‘இந்த அமைதி முயற்சியின் விதிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அதில் செயல்படுத்த கடினமாக அல்லது சாத்தியமற்ற விஷயங்களும் உள்ளன. இந்த முன்முயற்சிகளில் ஒன்று போர் நிறுத்தம். ஆனால் உக்ரைன் தரப்பு பெரிய அளவிலான தாக்குதல் நடவடிக்கையை செயல்படுத்துகிறது. தாக்குதலுக்கு உள்ளாகும்போது எங்களால் போர் நிறுத்தத்தை அமல்படுத்த முடியாது’ என்று புதின் குறிப்பிட்டார்.

அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த புதின், “நாங்கள் அமைதி பேச்சுவார்த்தையை நிராகரிக்கவில்லை. ஆனால் இந்த செயல்முறை தொடங்குவதற்கு, இரு தரப்பிலும் உடன்பாடு இருக்க வேண்டும்” என்றார்.

அதேசமயம் போர்நிறுத்தம் என்ற யோசனையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் நிராகரித்துள்ளார். தனது நாட்டின் ஐந்தில் ஒரு பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டில் தொடர்ந்து வைத்திருக்கவும், 17 மாதங்கள் நீடித்த போருக்குப் பிறகு அதன் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் போர் நிறுத்தம் வாய்ப்பாக அமைந்துவிடும் என்கிறார் ஜெலன்ஸ்கி.

இந்நிலையில் ரஷ்ய தலைநகர் மாஸ்கோ மீது உக்ரைன் நேற்று அதிகாலையில் ஆளில்லா விமானம் (ட்ரோன்) மூலம் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்த தாக்குதலில் காவலாளி ஒருவர் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. உயிரிழப்பு எதுவும் இல்லை. உக்ரைன் தரப்பில் இருந்து 3 டிரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. இதில் ஒரு டிரோன் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. எஞ்சிய 2 டிரோன்களும் மின்னணு ஆயுதங்கள் மூலம் தடுக்கப்பட்டது. அந்த டிரோன்கள் மாஸ்கோவில் உள்ள சர்வதேச வர்த்தக மைய கட்டிடம் மீது மோதி வெடித்தது. இதில் கட்டிடத்தின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளது. இந்த தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக ஒரு விமான நிலையம் மூடப்பட்டது. மாஸ்கோ தெற்குப் புறநகரில் உள்ள வனுகோவா விமான நிலையத்திற்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கு எந்த விமானங்களும் வரவில்லை. எந்த விமானமும் அங்கிருந்து புறப்பட்டுச் செல்லவில்லை. மேலும் மாஸ்கோ மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளிலும் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டது.