ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழப்பு!

ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மொத்தம் 8 தீவு நகரங்களை உள்ளடக்கியது. அதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது மவுயி. 727 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு நகரத்தில் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி 1.64 லட்சம் மக்கள் உள்ளனர்.

மவுயி நகருக்கு அருகில் அமைந்துள்ள காடுகளில் ஏற்பட்ட தீ நகருக்குள் பரவியது. நேற்று புதன்கிழமை அன்று டோரா சூறாவளி ஹவாய் தீவை கடந்தது. அதனால் ஏற்பட்ட சூறாவளி காற்றால் தீயின் பரவல் வேகமானது. இந்தப் பகுதி உயிர்வாழ பாதுகாப்பான இடம் இல்லை என பாதிக்கப்பட்ட இடத்தை வான்வழியாக பயணித்தவர்கள் கடந்தபோது பார்த்ததன் மூலம் தெரிவித்துள்ளனர்.

தீயின் பரவல் சற்றே தணிந்த நிலையில், அமெரிக்க விமானப்படை, கப்பல் படை மற்றும் மவுயி தீயணைப்பு துறை மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. கடற்கரையோரம் அமைந்துள்ள லஹைனா (Lahaina) பகுதியில் பாதிப்புகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக அளவில் காலநிலையில் ஏற்பட்ட மாற்றம், அதீத வெப்பம், அதிக காற்று, குறைந்த ஈரப்பதம் மற்றும் உலர்ந்த தாவரங்கள் உட்பட போன்றவை காட்டுத் தீயின் பரவலுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.