விஜயலட்சுமியை கைது செய்யக் கோரி நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் புகார்!

நடிகை விஜயலட்சுமி மற்றும் அவருக்கு ஆதரவாக செயல்படும் வீரலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நாம் தமிழர் கட்சியினர், பல்வேறு இடங்களில் காவல்துறையில் புகார் அளித்து வருகின்றனர். விஜயலட்சுமி பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே சீமான் மீது அவதூறு பரப்பி வருகிறார் என நாம் தமிழர் கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சீமான் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாகவும், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆதாரங்களுடன் சென்னை காவல்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார்ர். கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி, தமிழர் முன்னேற்ற படை தலைவர் வீரலட்சுமியுடன் சென்று, காவல் ஆணையர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் அளித்தார் நடிகை விஜயலட்சுமி. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயலட்சுமி தனக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தார். இந்த புகார் குறித்து உரிய விசாரணை நடத்த கோயம்பேடு காவல் துணை ஆணையர் உமையாளுக்கு சென்னை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி கோயம்பேடு மாவட்ட காவல் துணை ஆணையர் உமையாள், மதுரவாயல் காவல் நிலையத்தில் வைத்து இரண்டு நாட்கள் விஜயலட்சுமியிடம் விசாரணை நடத்தியுள்ளார். இதற்கிடையே, நேற்று முன்தினம் திருவள்ளூர் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் விஜயலட்சுமி ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு சுமார் இரண்டரை மணி நேரம் வாக்குமூலம் அளித்துள்ளார் விஜயலட்சுமி.

இந்நிலையில் சீமான் பெயருக்கு நடிகை விஜயலட்சுமி களங்கம் விளைவித்து வருவதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். அதேபோல, சேலம் மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறையினர், நடிகை விஜயலட்சுமி பணம் பெற்றுக்கொண்டு வேண்டுமென்றே சீமான் மீது அவதூறு பரப்பி வருவதாக குற்றம்சாட்டினர். கோயம்பேடு மாவட்ட காவல் துணை ஆணையர் அலுவலகத்திலும், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், நடிகை விஜயலட்சுமி மற்றும் வீரலட்சுமி ஆகியோர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகை விஜயலட்சுமியும், வீரலட்சுமியும் திட்டமிட்டு அபாண்டமான குற்றச்சாட்டுகளை தெரிவித்தது வருவது மட்டுமில்லாமல் பொய் புகார் அளித்து வருவதாகவும், அரசியல் காழ்ப்பணர்ச்சியுடன் செயல்படுவதாகவும் கூறி நாதகவினர் புகார் அளித்தனர்.

சீமான் மீது அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாம் தமிழர் கட்சியின் மகளிரணியினர் நேற்று புகார் மனு அளித்துள்ளனர். சீமான் மீது அவதூறு பரப்பி வரும் நடிகை விஜயலட்சுமிடை கைது செய்ய வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். லோக்சபா தேர்தல் நெருங்கும் நேரத்தில், அரசியல் உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டை நடிகை விஜயலட்சுமி கூறி வருகிறார். அவருடைய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் விஜயலட்சுமி இது போன்ற பொய் புகார்களை கூறி வருவதாகவும் அவரை கைது செய்ய வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியினர் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் காவல்துறையில் புகார் அளித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.