ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும்: ஆதித்யா தாக்கரே

முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை. எனவே ஜல்னா வன்முறைக்கு பொறுப்பேற்று மராட்டிய அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு கோரி நடந்த போராட்த்தில் வன்முறை வெடித்தது. இதில் 14 வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை கலைத்தனர். போலீசார் தடியடி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மராத்தா அமைப்புகள் சார்பில் வாஷிம் மாவட்டம் ராஜ்குமார் சவுக்கில் நேற்று சாலை மறியல் நடத்தப்பட்டது. சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் தடியடி நடத்திய போலீசாரை இடைநீக்கம் செய்ய வேண்டும், தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் ஜல்னா வன்முறை மற்றும் போலீஸ் தடியடி சம்பவங்களுக்கு பொறுப்பேற்று மராட்டிய மாநில அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என முன்னாள் மந்திரி ஆதித்யா தாக்கரே வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-

ஜல்னாவில் நடந்ததை அனைவரும் பார்த்திருப்போம். எதிரிகளை தாக்குவது போல் மிகவும் கொடூரமான முறையில் தடியடி நடத்தப்பட்டுள்ளது. அங்கு உணர்வுப்பூர்வமான பிரச்சனை தொடர்பாக போராட்டம் நடைபெற்றது. முதல்-மந்திரிக்கு தெரிவிக்காமல் போலீசார் தடியடி நடத்துவது சாத்தியமில்லை. கொஞ்சம் வெட்கம் இருந்தால் மாநில அரசு பதவி விலக வேண்டும். இவ்வாறு ஆதித்யா தாக்கரே தெரிவித்தார்.

இந்நிலையில் ஜல்னா தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். மேலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டார்.

மராட்டியத்தில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மனோஜ் பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்க்க கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அன்டர்வாலி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவிடாமல் போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். 15 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 40 போலீசார் மற்றும் பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் பாட்டீல், மராத்தா சமூகத்தினரை சந்தித்து பேசினர். இந்த விவகாரத்தில் உள்துறை பொறுப்பை கவனிக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன.

இந்தநிலையில் ஜல்னா தடியடி சம்பவம் குறித்து சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சக்சேனா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று புல்தானாவில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:-

தடியடி சம்பவம் குறித்து கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சக்சேனா விசாரணை நடத்துவார். தேவைப்பட்டால் நீதி விசாரணை நடத்தப்படும். தவறு செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஜல்னா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துஷார் தோஷி கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டுள்ளார். 2 துணை சூப்பிரண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சாதாரண மராத்தா குடும்பத்தில் பிறந்த எனக்கு உங்களின் வேதனை புரிகிறது. மராத்தா சமூகத்துக்கு இடஒதுக்கீடு கிடைக்க அரசு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கும். மராத்தா சமூகத்தினர் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.