உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும்: கே.பாலகிருஷ்ணன்

உதயநிதியின் தலைக்கு விலை நிர்ணயித்த அயோத்தி சாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

பாஜகவுக்கு எதிராக தீவிரமாக களமாடி வந்த இந்தியா கூட்டணி கட்சிகள் உதயநிதியின் சனாதன கருத்துக்குப் பின்னர் அது குறித்த சர்ச்சைகளுக்கு பதில் அளிக்கவே நேரம் செலவிட்டு வருகின்றனர். பாஜக திறமையாக காய் நகர்த்தி இந்த சர்ச்சையை பூதாகரமாக்கி இந்தியா கூட்டணிக் கட்சிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை சென்னை காமராஜர் அரங்கில் தமுஎகச அமைப்பின் சார்பாக நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் தான் உதயநிதி சனாதனதுக்கு எதிராக பேசியிருந்தார். மார்க்சிஸ்ட் கட்சியின் துணை அமைப்பாகவே தமுஎகச செயல்பட்டு வரும் நிலையில் மார்க்சிஸ் கட்சி சார்பாக இந்த சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்து அறிக்கை விடப்பட்டுள்ளது. உதயநிதியின் தலைக்கு விலை வைத்த சாமியாருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:-

ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும். ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது ஆகும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இச்செயலை வன்மையாக கண்டிக்கிறது.

இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். ஆர்எஸ்எஸ், பாஜகவைச் சேர்ந்த யாரும் இதைக் கண்டிக்க முன்வரவில்லை என்பது இத்தகைய கிரிமினல் நடவடிக்கைக்கு துணைபோகும் செயலாகும். உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. மாற்றுக் கருத்து தெரிவிப்பவர்களை கொலை செய்து விடுவதாக மிரட்டும் அயோத்தி சாமியாருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் கண்டனம் தெரிவிக்க முன்வர வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.