ஜெயலலிதா மரணம்: பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாணை நடத்திய ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக வழக்கு தொடர்ந்த மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பரவலாக பேச்சுகள் எழுந்த நிலையில் அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அப்போதைய அதிமுக அரசு அமைத்தது. இதையடுத்து, ஜெயலலிதாவுடன் இருந்தவர்கள், அவரது உறவினர்கள், ஓபிஎஸ், சசிகலா, அவரது உறவினர்கள், அரசு மூத்த அதிகாரிகள், அமைச்சர்கள், அப்பல்லோ நிர்வாகம், அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், அரசு மருத்துவர்கள் உள்ளிட்ட பலருக்கும் சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொண்ட ஆறுமுகசாமி ஆணையம், தனது அறிக்கையை முதல்வர் ஸ்டாலினிடம் சமர்ப்பித்தது. இந்த அறிக்கை சட்டமன்றத்திலும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா, அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கே.எஸ்.சிவகுமார், அப்போதைய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், அப்போதைய சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய நால்வர் மீதும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஆணையம் அரசுக்கு பரிந்துரைத்தது. அப்போதைய தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் பல்வேறு நாட்களில் அரசுக்கு கடிதம் வாயிலாக தெரிவிக்கவில்லை என்பதை குற்றமாக கருதி விசாரிக்கப்பட வேண்டும் என்றும், ஜெயலலிதா எந்த நேரத்திலும் டிஸ்சார்ஜ் செய்யப்படலாம் என செய்தியாளர் சந்திப்பில் பொய்யான தகவலை தெரிவித்த அப்பல்லோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி விசாரிக்கப்பட வேண்டும் எனவும் ஆணையம் பரிந்துரைத்தது.

இந்த நிலையில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞரும், ஜெ.ஜெயலலிதா ஃபாலோயர்ஸ் கட்சியின் நிறுவன தலைவருமான பி.ஏ.ஜோசப் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதில், ஜெயலலிதா மரணம் பற்றி விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு பிறகு அறிக்கை தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ள அரசு அதிகாரிகள், மருத்துவர்கள், அரசியல்வாதிகள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்காமல் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வரிப்பணத்தை செலவிட்டு அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் அளித்த பரிந்துரைகளின்படி தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்று பொதுமக்களும், அதிமுக கட்சியினரும் காத்திருக்கும் நிலையில், அந்த அறிக்கையை அரசு கிடப்பில் போட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு தொடர்பாக விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பாக மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளார்.