சீமான் மீது புகார் கூறிய விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை!

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு புகார் கூறிய நடிகை விஜயலட்சுமிக்கு சென்னை மருத்துவமனையில் போலீசார் இன்று மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் சீமான் மீது 2011-ம் ஆண்டு முதல் தொடர்ந்து புகார் கூறி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மீண்டும் ஒரு புகார் கொடுத்தார் அதில், 2008-ல் சீமான் மதுரையில் தம்மை திருமணம் செய்து கொண்டார். 2011-ல் பணம், நகைகளை பறித்துக் கொண்டு மோசடி செய்துவிட்டார். அத்துடன் 7 முறை சீமான் தம்மை கட்டாய கருக்கலைப்பு செய்ய வைத்தார் என்பது உள்ளிட்ட ஏராளமான புகார்களை விஜயலட்சுமி தெரிவித்திருந்தார். ஆனால் இந்த புகார்களை சீமான் திட்டவட்டமாக மறுத்திருந்தார். அரசியல் காரணங்களுக்காக தம்மை தேர்தல் பணியில் இருந்து திசை திருப்பிவிடுவதற்காக இந்த புகார்கள் தெரிவிக்கப்படுவதாகவும் சீமான் விளக்கம் அளித்திருந்தார்.

இதனிடையே சென்னை போலீசார், விஜயலட்சுமியை வரவழைத்து சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். சீமான் மீது தெரிவித்த புகார்களுக்கான ஆதாரங்களையும் போலீசார் விஜயலட்சுமியிடம் பெற்றனர். பின்னர் திருவள்ளூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விஜயலட்சுமியின் வாக்குமூலமும் பதிவு செய்யப்பட்டது. அப்போது, சீமான் கைது செய்யப்படலாம் என தகவலும் பரவியது. ஆனால் தமக்கு எந்த ஒரு சம்மனும் வரவில்லை என சீமான் கூறியிருந்தார். மேலும் ஒவ்வொரு செய்தியாளர் சந்திப்பிலும் விஜயலட்சுமியை மிகவும் கடினமான வார்த்தைகளால் சீமான் விமர்சிக்கவும் செய்தார். மானங்கெட்ட ஒருத்தியோடு எப்படி சண்டையிட முடியும்? என்றும் சீமான் ஆவேசப்பட்டார்.

இந்நிலையில் இன்று நடிகை விஜயலட்சுமியை போலீசார் மீண்டும் அழைத்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தினர். இது தொடர்பாக போலீஸ் வட்டாரங்களில் விசாரித்த போது, சீமான் தம்மை 7 முறை கட்டாய கருக்கலைப்பு செய்ததாக விஜயலட்சுமி புகார் கூறியிருக்கிறார். இதன் உண்மைத்தன்மைக்காக தற்போது மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது என்றன. சென்னையில் போலீஸ் விசாரணை, நீதிமன்றத்தில் வாக்குமூலம், மருத்துவ பரிசோதனை என விஜயலட்சுமி விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கைகள் தொடருவதால் சீமானுக்கு நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.