கொடநாடு வழக்கில் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு அவகாசம்!

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் நடத்தப்பட்ட மேல் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய செப்டம்பர் 21ஆம் தேதி வரை காவல் துறைக்கு அவகாசம் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் 200க்கும் மேற்பட்ட சாட்சிகள் உள்ளது. அதில் குறிப்பிட்ட 9 சாட்சிகளை விசாரிக்க வேண்டும் என்று நீலகிரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்ததாகவும், ஆனால் கொடநாடு மேலாளரை மட்டும் விசாரிக்க அனுமதி அளித்துவிட்டு மற்றவர்களை விசாரிக்க நீலகிரி நீதிமன்றம் மறுத்திருந்தது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்து தாங்கள் குறிப்பிடும் நபர்களை விசாரிக்க வேண்டும் என கொடநாடு கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தீபு, சதீஷன், சந்தோஷ் சாமி ஆகியோர் மனுத்தாக்கல் செய்து இருந்தனர்.

இந்த மனுவானது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் மேல் விசாரணை செய்ய அனுமதி கோரி கீழமை நீதிமன்றத்தில் செய்த மனுவுக்கு அனுமதி கிடைத்துள்ளதாகவும், அந்த அனுமதி கிடைத்துள்ளதால் மேல் விசாரணை நடந்து வருகிறது. மேலும் சாட்சிகள் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதால் இந்த மனுவை விசாரிக்க கூடாது என வாதிடப்பட்டது.

மேலும் மேல் விசாரணை தொடர்பான விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி இரண்டு வாரம் அவகாசம் வழங்கியதுடன் வழக்கை வரும் செப்டம்பர் 21ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.