ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக ஆளுநர் செயல்படுகிறார்: துரை வைகோ

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார் என்று துரை வைகோ கூறினார்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ கூறியதாவது:-

கர்நாடகா தமிழகத்துக்கான தண்ணீரை வழங்காமல் வஞ்சிக்கிறது. வறட்சியான சூழலிலும் விகிதாச்சார அடிப்படையில் தமிழகத்துக்கு தண்ணீர் தர உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே, கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளதாக எதிர்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் 4 மாதங்களுக்கு முன் வரை அங்கு ஆட்சியில் இருந்தது பாஜதான். 8 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இருந்தபோது பாஜ தமிழகத்துக்கு சுமூகமாக தண்ணீர் வழங்கவில்லை. கர்நாடகா அரசு, தமிழகத்தை வடிகாலாகத்தான் பயன்படுத்துகின்றது.

தமிழக ஆளுநர் ஆர்எஸ்எஸ், பாஜ ஏஜென்டாக செயல்படுகிறார். தமிழகம் மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்தியாவில் பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் அம்மாநில கல்வி, அரசியலில் தலையிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தமிழகத்தில் கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியில் 1.06 கோடி பேருக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.