கொரோனாவை விட கொடூர வைரஸால் மனிதர்களுக்கு பேராபத்து!

கொரோனாவை விட கொடூர வைரஸால் உருவாகும் Disease X தொற்று மனிதர்களுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டன் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வைரஸ் தொற்றால் 5 கோடி பேர் வரை உயிரிழக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக நாடுகள் பலவும் கொரோனா பெருந்தோற்று அலை அலையாக ஏற்படுத்திய தாக்கத்தில் இருந்து தற்போதுதான் மெல்ல மீண்டுள்ளன. கொரானா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்தியாவிலும் மூன்று அலைகளாக பரவிய கொரோனா பெருந்தோற்றுக்கு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலர் உயிரிழந்தனர். கொரோனா தாக்கத்தில் இருந்து கடந்த இரண்டு ஆண்டுகளாகதான் உலக நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். சமீபத்தில் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன வைராலஜிஸ்ட் ஷி ஜெங்லி கூறியிருந்தார். மேலும் அதனை எதிர்க்கொள்ளும் வகையில் உலக நாடுகள் தங்களின் மருத்துவ கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். சீன வைரஸ் ஆய்வாளரான ஷி ஜெங்லியின் இந்த எச்சரிக்கையே உலக நாடுகள் மத்தில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பிரிட்டன் விஞ்ஞானிகள் புதிய தொற்று குறித்து கூறியுள்ள தகவல் பேரதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது பிரிட்டனின் கோவிட் வேக்ஸின் குழுவின் தலைவராக உள்ள டேம் கேட் பிங்காம் இதுகுறித்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளார். அதன்படி இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த வைரஸ் தொற்றால் 5 கோடி பேர் வரை மரணம் அடையலாம் என தெரிவித்துள்ளார். மேலும் தற்போது பரவிய கொரோனா தொற்றின் பாதிப்பு தீவிரமானதாக இல்லை என்பது நம் அதிர்ஷ்டம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தி இருந்தால் உயிரிழப்பு பல மடங்கு அதிகரித்திருக்கும் என்றும் கூறியுள்ள டேம் கேட் பிங்காம் தீவிரம் இல்லாத போதே கொரோனா வைரஸால் 70 லட்சம் பேர் உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். தற்போது அச்சுறுத்தும், இந்த புதிய நோய் தொற்றான ’Disease X’ கொரோனாவை விட 7 மடங்கு கொடூரமானதாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

1918 மற்றும் 1919ஆம் ஆண்டுகளில் பரவிய வைரஸ் காய்ச்சலால் 5 கோடி பேர் உயிரிழந்தது போல் இந்த புதிய புதிய தொற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த நோய் தொற்று ஏற்கனவே மனிதர்கள் மத்தியில் இருக்கும் வைரஸிலிருந்து தோன்றக்கூடும் என்றும், இன்று உள்ள பல வைரஸ்களில் ஒன்றாக அந்த வைரஸ் உருமாற்றம் அடையலாம் என்றும் டேம் கேட் பிங்காம் எச்சரித்துள்ளார்.

இதேபோல் உலக சுகாதார அமைப்பும் (WHO) எச்சரித்துள்ளது. அடுத்த தொற்றுநோயை “டிசீஸ் எக்ஸ்” என்று குறிப்பிட்டுள்ளது. இது ஏற்கனவே “அதன் வழியில்” இருக்கலாம் என்று கூறியுள்ளது. தற்போது 25 வைரஸ் பிரிவுகளிலும் கண்காணித்து வருவதாகவும் அவற்றில் ஆயிரக்கணக்கான வைரஸ் இருப்பதாகவும் அவற்றில் ஒன்று உருமாறினாலும் பெருந்தொற்றாக மாறி மனித குலத்திற்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.