காவிரி விவகாரமே திமுக, காங்கிரஸ் அரசுகளின் திட்டமிட்ட சதிதான்: நாராயணன் திருப்பதி!

அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம் என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்கப்பட்டதை கண்டித்து பெங்களூர், மாண்டியா உள்ளிட்ட நகரங்களில் விவசாய அமைப்புகள் மற்றும் கன்னட அமைப்புகள் பந்த் நடத்தியுள்ளன. காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் வலுத்துள்ள போராட்டங்களால் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், கர்நாடக முதல்வர் சித்தராமையாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு கொண்டு வரலாம், ஆனால், திட்டமிட்டு அரசியல் செய்கிறார்கள், இந்த பிரச்சனையை வைத்து பதற்றத்தை ஏற்படுத்த சதி செய்கிறார்கள் என பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இதுதொடர்பாக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியுள்ளதாவது:-

“தண்ணீர் தரக்கூடாது என்பதே எங்கள் நிலைப்பாடு; தண்ணீர் திறக்காவிட்டால், நீர்த்தேக்கங்களை மத்திய அரசால் கைப்பற்ற முடியுமா? நீதிமன்ற அவமதிப்பாக அதை கருத முடியுமா? அரசாங்கத்தையே இதனால் கலைக்க முடியுமா? என்ற கோணத்தில் ஆலோசனை நடைபெறும்” என்று கூறியிருக்கிறார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. சட்டம் தெரியாமல் பேசுகிறாரா? அல்லது சட்டம் தெரிந்தே வேண்டுமென்றே மத்திய அரசை வம்புக்கிழுக்க வேண்டி பேசுகிறாரா கர்நாடக முதல்வர்? மலிவான மொழி அரசியல் செய்து கேடுகெட்ட நிர்வாகத்தை நடத்துகிறது காங்கிரஸ் அரசு.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் விதிகளின் படி, நீர்ப்பிடிப்பு, பங்கீடு, ஒழுங்குமுறைப்படுத்துதல், காவேரி நீரை கட்டுப்படுத்துதல் ஆகியவைகள் காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரங்கள் என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், அணைகளின் பராமரிப்பை மேற்பார்வையிடுதல், ஒழுங்காற்று குழுவின் மூலமாக நீரை திறந்து விடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு முழு பொறுப்பும் இந்த ஆணையமே என்று தெளிவாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. கேரளாவில் உள்ள பனசுராசகர், கர்நாடகாவில் உள்ள ஹேமாவதி, ஹாரங்கி, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகரா நீர்த்தேக்கங்கள், தமிழகத்தில் உள்ள கீழ் பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கங்கள் அனைத்தையும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் மேற்பார்வையில் அந்தந்த மாநிலங்களால் ஒருங்கிணைந்து செயல்படுத்த வேண்டும். இந்த ஆணையமானது, ஒவ்வொரு மாநிலத்திலும் விளையும் பயிர்களின் குறிப்பு, விவசாய நிலப்பரப்பு முறைகள் குறித்த விவரங்கள் மற்றும் குடிநீர் மற்றும் தொழிற்துறை தொடர்பான நீர் உபயோகம் குறித்த ஒவ்வொரு மாநிலத்தின் விவரங்களையும் கணக்கிட்டு மேற்பார்வையிட வேண்டும்.

இந்த ஆணையத்தில் மத்திய அரசு, தமிழகம், கர்நாடகம், கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட அனைத்து அரசுகளும் நியமிப்பவர்கள் உறுப்பினர்களாக இருப்பார்கள். மேற்சொன்னவை உட்பட, பல்வேறு நிபந்தனைகளுடன் நான்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வல்லுநர்கள் பலர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டு நடுநிலையாக செயல்பட வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது உச்சநீதிமன்றம். இவ்வளவு இருந்தும் வேண்டுமென்றே திட்டமிட்ட ரீதியில் உண்மைக்கு புறம்பான தகவல்களை, தரவுகளை கர்நாடக மாநில காங்கிரஸ் அரசே பரப்புவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த ஐந்து வருடங்களில் பாஜக அரசு கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்த போது, உண்மையைச் சொல்லி அந்தந்த சூழ்நிலைக்கேற்ப தண்ணீர் திறந்து விடப்பட்டதால், இரு மாநிலங்களுக்கிடையில் எந்த பிரச்சனையும் எழாத சூழ்நிலையில், இப்போது மட்டும் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி, மொழி ரீதியாக, மாநில ரீதியாக காங்கிரஸ் அரசு பதட்டத்தை உருவாக்குவது முறையல்ல. நீர் தேக்கங்களை மத்திய அரசு கைப்பற்ற முடியுமா? என்ற கேள்விக்கு, சட்டப்படி, அந்த நீர்த்தேக்கங்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது என்பதை தெரிந்துகொண்டே தான் மலிவான அரசியலை கர்நாடக காங்கிரஸ் அரசு செய்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும். நீதிமன்ற அவமதிப்பாக கருத முடியுமா என்றால், ஆம், இது நீதிமன்ற அவமதிப்பு தான் என்பதே பதில். அரசாங்கத்தையே இதனால் கலைக்க முடியுமா? என்ற கேள்விக்கு, ஒரே பதில், பாராளுமன்ற தேர்தல் வரும் வேளையில், கர்நாடக மக்களை மொழி ரீதியாக, மாநில உணர்வுகளை தூண்டி விட்டு கலவரத்தை ஏற்படுத்த முயற்சித்து அதன் மூலம் அகில இந்திய அளவில் பதட்டத்தை தூண்ட முயற்சித்து, சட்ட ஒழுங்கை காரணம் காட்டி மாநில அரசை கலைக்க முடியுமா என சவால் விடுகிறது காங்கிரஸ். அதற்கு துணை நிற்கிறது திமுக. அதிகாரத்திற்கு வருவதற்காக, திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் இணைந்து இரு மாநில மக்களிடையே பிளவை உருவாக்கும் சதித்திட்டமே தற்போதைய காவிரி விவகாரம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.