தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்: சிவராஜ் குமார்

காவிரி நீர் விவகாரத்தில் போராட்டம் நடத்துவதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்று கன்ன நடிகர் சிவராஜ் குமார் பேசிஉள்ளார்.

காவிரி விவகாரம் தமிழ்நாட்டிலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு தண்ணீர் காவிரியில் இருந்து தர மாட்டோம் என்று கர்நாடகா அரசு கூறி வந்த நிலையில், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, காவிரி மேலாண்மை வாரியம் ஆகியவற்றின் உத்தரவால் வேறு வழியின்றி காவிரி நீரை திறந்து விட்டுள்ளது. வினாடிக்கு 5000 கனஅடி நீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விட உத்தரவிடப்பட்ட சூழலில், வெறும் 4,600 அடி நீர் மட்டுமே திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில், காவிரி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்து விட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் நேற்று பல்வேறு கன்னட அமைப்புகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் பெங்களூர் உள்ளிட்ட இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடப்பட்டதை கண்டித்து கன்னட திரைத்துறையினர் சார்பில் பெங்களூரில் கன்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு ஜெயிலர் புகழ் நடிகர் சிவராஜ் குமார் பேசியதாவது:-

தமிழ்நாட்டிற்கும், கர்நாடகாவுக்கும் இடையே காவிரி பிரச்சினை என்பது காலம் காலமாக தொடர்ந்து வருகிறது. இது இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் நீடிக்க வேண்டும்? ஒரு பிரச்சினை என்றால் அதை பேசி தீர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு போராட்டம் நடத்துவதாலும், மறியல் நடத்துவதாலும் எந்த பிரயோஜனும் இல்லை. போராட்டம் நடத்துவதால் ஏதாவது தீர்வு கிடைத்துவிட போகிறதா? ஒன்றுமே இல்லை. இந்த விவகாரத்தில் இரு மாநில அரசாங்கங்கள் தான் பேச வேண்டும்.

இரு தரப்புக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு, கர்நாடகா அரசாங்கங்கள் பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஒருவரையொருவர் புரிந்துகொள்வதும், அனுசரித்து செல்வதும்தான் மனிதத் தன்மை. பிரச்சினையை மேலும் மேலும் பெரிதாக்கிக் கொண்டே செல்வது நல்லது கிடையாது. நேற்று பெங்களூரில் நடைபெற்ற ஒரு திரைப்பட நிகழ்ச்சியில் இருந்து தமிழ் நடிகர் சித்தார்த் வெளியேற்றப்பட்டிருக்கிறார். இதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு சிவராஜ் குமார் பேசினார்.