தென் மாவட்டங்களுக்கு துணை ராணுவத்தை அனுப்ப வேண்டும்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழ்நாட்டில் தென் மாவட்ட மக்களின் பாதுகாப்பு கருதி துணை ராணுவ படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரிடம் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த 1995 ஆம் ஆண்டை போன்ற கலவரம் சூழல் ஏற்படும் அபாயம் நிலவி வருவதாகவும், தென் மாவட்டங்களில் அதிக அளவிலான கொலை குற்றங்கள் நடந்து வருவதால், துணை ராணுவப் படையை அனுப்பி வைக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கவர்னர் ரவி ஆகியோருக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி கடிதம் எழுதி இருக்கிறார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:-

தமிழ்நாட்டில், 2021 ஆம் ஆண்டில் தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் 1995 ஆம் ஆண்டில் நடந்ததை போன்ற கலவரச் சூழல், தென் மாவட்டங்களில் ஏற்பட்டு உள்ளது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும், தென் மாவட்டங்களில் 50 க்கும் அதிகமான கொலைகள் நடந்து உள்ளன. இதில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். தனது சொந்த நிலத்தில் உழைத்துப் பிழைப்பதற்கு வழியின்றி அஞ்சி வாழ வேண்டி இருக்கிறது. அல்லது அங்கிருந்து வெளியேற வேண்டிய சூழல் உள்ளது. காவல் துறையில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 90 சதவீதம் இருப்பதே இதற்கு காரணமாகும். தென் மாவட்டங்களில் கலவரம் வெடித்தால் அதை வைத்தே அரசியல் லாபம் அடையலாம் என தி.மு.க. அரசு கருதுகிறது. எனவே, தென் மாவட்டங்களில் நடந்த ஜாதி ரீதியான ஒடுக்குமுறைகள், மனித உரிமை மீறல்கள், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான சமூக கொடுமைகளை முறையாக விசாரணை நடத்த மத்திய உள்துறை சிறப்புக் குழுவை அனுப்பி வைக்க வேண்டும்.

மத்திய உள்துறை இணை அமைச்சரை தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்து உண்மை நிலையை கண்டறிய வேண்டும். தென் மாவட்ட மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில், சிறிது காலத்திற்காவது துணை ராணுவப் படையை அங்கு நிறுத்தி வைக்க வேண்டும். வரும் மக்களவைத் தேர்தலில், அனைவரும் அச்சமின்றி தேர்தல் பணிகளைச் செய்யும் சூழலை உருவாக்க வேண்டும். சமூக விரோதிகளுக்கு துணையாக இருக்கும் காவல் துறையினரை இடமாற்றம் செய்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.