செயற்கைக்கோளுக்கு இடையூறு செய்வது போா்ப் பிரகடனம்: வடகொரியா

தங்களது உளவு செயற்கைக்கோளில் செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது தங்களுக்கு எதிராக போா்ப் பிரகடனம் செய்வதற்கு ஒப்பாகும் என்று வட கொரியா எச்சரித்துள்ளது.

இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

எங்களது உளவு செயற்கைக்கோள் இயக்கங்களுக்கு இடையூறு செய்யும் வகையில் மேற்கொள்ளப்படும் எந்தவொரு நடவடிக்கையும் எங்கள் மீதான போா்ப் பிரகடனமாகவே கருதப்படும். எங்களது விண்வெளி திட்டங்களைக் குலைக்கும் வகையிலான நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டால், அதற்குப் பதிலடியாக அமெரிக்க உளவு செயற்கைக்கோள்களைப் பயனற்றதாக்குவோம். நவீன தொழில்நுட்பங்களை போா் ஆயுதங்களாக அமெரிக்கா பயன்படுத்தினால் அதற்கு வடகொரியா தகுந்த எதிா்வினையாற்றும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2 முறை தோல்வியடைந்த பிறகு வடகொரியா முதல்முறையாக தனது உளவு செயற்கைக்கோளை கடந்த மாதம் 21-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக அறிவித்தது. இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது.