குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது காலமானார்!

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரது உயிர் பிரிந்தது.

பல்வேறு இஸ்லாமிய நாடுகளின் இன்னும் மன்னராட்சி முறை என்பது நடைமுறையில் உள்ளது. அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா இருந்தார். இவர் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் குவைத் மன்னராக பொறுப்பேற்றார். வயது முதிர்வு காரணமாக செய்க் நவாப் அல் அகமது அல் சபா உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து செய்க் நவாப் தனது பெரும்பாலான பொறுப்புகளை 2021ம் ஆண்டே பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைத்தார். இந்நிலையில் தான் கடந்த மாதம் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

மருத்துவமனை தரப்பில் செய்க் நவாப் நன்றாக உள்ளார் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. அவருக்கு எந்த மாதிரியான உடல்நல பிரச்சனை உள்ளது என்பது பற்றி எதுவும் தெரிவிக்கப்பவில்லை. இதையடுத்து சிகிச்சை முடிந்து மன்னர் செய்க் நவாப் மீண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 86. இதன்மூலம் செய்க் நவால் அல் அகமது அல் சபா குவைத் மன்னராக குறுகிய காலம் அதாவது 3 ஆண்டு மட்டுமே பதவி வகித்துள்ளார். தற்போது செய்க் நவாப் அல் அகமது அல் சபா காலமான நிலையில் குவைத்தின் அடுத்த மன்னராக பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபா பொறுப்பேற்க உள்ளார். இவருக்கு வயது 83 ஆகும். இவர் விரைவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் உறுதிமொழி ஏற்று குவைத்தின் அதிகாரப்பூர்வ மன்னராக பட்டம் சூடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.