சேலம் பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதனுக்கு இடைக்கால ஜாமீன்!

அரசு நிதியை தவறாக பயன்படுத்திய புகாரில் கைது செய்யப்பட்ட சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதனுக்கு 7 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த 7 நாட்களும் அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக நிறுவனம் தொடங்கி, அதன் மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதாக துணைவேந்தர் ஜெகநாதன் மீது புகார் எழுந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்துகொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளைக் கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்ததும், அதன் மூலம் அரசு நிதியை தவறாகப் பயன்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீஸார் நேற்று (புதன்கிழமை) இரவு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில், சேலம் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு முன் ஜெகநாதன் இன்று (டிச.27) காலை ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவருக்கு 7 நாட்கள் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். இந்த 7 நாட்களும் அவர் சூரமங்கலம் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.