தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இன்று ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, நிலுவையில் உள்ள பல்வேறு கோப்புகள், மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழக அரசின் சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு நீண்ட காலமாக ஒப்புதல் அளிக்காமல் தமிழக ஆளுநர் நிலுவையில் வைத்திருப்பது தொடர்பாக, ஆளுநருக்கு உரிய அறிவுரைகள் வழங்க வேண்டி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்திருந்தது. அவ்வழக்கில், ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக முதல்வருடன் ஆலோசனை நடத்திட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்ததன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.

முதல்வரின் வலியுறுத்தல்கள்: ஆளுநர் அழைப்பினை ஏற்று, தமிழக முதல்வர் இன்று (30.12.2023) ஆளுநர் மாளிகையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை மற்றும் உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் மற்றும் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா ஆகியோருடன் ஆளுநரைச் சந்தித்தார். ஆளுநருடனான இச்சந்திப்பின்போது, பல மாதங்களாக ஆளுநரிடம் நிலுவையில் இருக்கும் பல்வேறு கோப்புகளுக்கு விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திட வேண்டுமென்று ஆளுநரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

அதேபோன்று, தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி அனுப்பி வைத்த 10 முக்கியமான மசோதாக்களை, அரசியல் சாசனத்தில் எங்கும் குறிப்பிடாத வகையில், தேவையின்றி குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதைத் திரும்பப் பெற்று, அவற்றுக்கும் விரைந்து ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பி வைத்திடவும் ஆளுநரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

ஊழல் வழக்குகளில் சம்மந்தப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.சி.வீரமணி மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளும் பல மாதங்களாக ஆளுநர் வசம் நிலுவையில் உள்ளன. அவற்றுக்கும் விரைந்து ஒப்புதல் வழங்க இச்சந்திப்பின்போது வலியுறுத்தப்பட்டது. இதில் கே.சி.வீரமணி தொடர்பான கோப்பினை 15 மாதங்களுக்கு மேலாகவும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான கோப்பினை 7 மாதங்களுக்கு மேலாகவும் ஆளுநரிடம் நிலுவையில் உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவிகளுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்பும், நீண்ட காலமாக ஆளுநரிடம் நிலுவையில் உள்ளது குறித்தும் தெரிவிக்கப்பட்டு அவற்றுக்கு ஒப்புதல் அளித்து திரும்ப அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது.

பொதுவாக, அரசியல் சாசன விதிகளுக்குட்பட்டு ஆளுநர் செயல்பட வேண்டுமென்றும், அப்போதுதான் மாநில மக்களின் நலனுக்கும், நிர்வாகத்திற்கும் பயனளிக்கக்கூடிய வகையில் ஆளுநர் செயல்பாடு அமையும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநரிடம் எடுத்துரைத்தார். ஆளுநரிடம் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் தொடர்பாக அவர் கோரிய அனைத்து விவரங்களும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களால் ஆளுநருக்கு நேரிலும், எழுத்துபூர்வமாகவும் அளிக்கப்பட்டுள்ள நிலையில், உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துகளை ஆளுநர் மனதில்கொண்டு, நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கும், கோப்புகளுக்கும் உரிய காலத்தில் ஒப்புதல் வழங்கிட வேண்டுமென்றும், வருங்காலங்களில் இதுபோன்ற தாமதங்களை ஆளுநர் தவிர்த்திட வேண்டுமென்றும் ஆளுநரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.

இந்த ஆலோசனையின் போது, அரசின் சார்பாக மேற்படி கருத்துகளை முதல்வரும், அமைச்சர்களும், தலைமைச் செயலாளரும் விரிவாக எடுத்துக் கூறினர். முதல்வர், ஆளுநருக்கு கடிதம் ஒன்றையும் அப்போது வழங்கினார். இக்கடிதத்தில் அரசியல் சாசனத்தின்படி அமைக்கப்பட்டுள்ள அனைத்து உயர் அமைப்புகளின் மீதும் தனக்கு மிக உயர்ந்த மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பதாகத் தெரிவித்துள்ள முதல்வர், நிலுவையிலுள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்து தெரிவித்தது, மாநில நிர்வாகம் மற்றும் பொதுமக்களின் நலன் கருதி அவற்றிற்கு விரைந்து ஒரு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற நோக்கத்தில்தான் என்பதையும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.