ஹமாஸைவிட இஸ்ரேலைப் பார்த்துதான் அஞ்சுகிறோம்: பிணைக்கைதிகள்!

இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேர் பேசும் புதிய காணொலி ஒன்றினை ஹமாஸ் அமைப்பு பகிர்ந்துள்ளது. அதில் பிணைக்கைதிகள் இஸ்ரேலின் மீது குற்றம்சாட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அக்டோபர் 7-ல் ஹமாஸ் அமைப்பினரால் பிணைக்கைதிகளாகப் பிடித்துவரப்பட்டவர்களில் மூன்று பெண் கைதிகள் இந்தக் காணொலியில் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் இஸ்ரேலின் முயற்சிகளைக் குற்றம் சாட்டும் காட்சிகள் அதில் இடம்பெற்றுள்ளன. டேனியல்லா கில்போவா, கரினா அரிவ், டோரோன் ஸ்டெய்ன்பிரீச் ஆகிய பெண்கள் அந்தக் காணொலியில் பேசியுள்ளனர். இரண்டு பெண்கள் தங்களை ராணுவ வீரர்களாக அடையாளம் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களையும், பிணைக்கைதிகளை மீட்கத் தகுந்த எந்த நடவடிக்கையையும் இஸ்ரேல் எடுக்கவில்லை என ஒரு பெண் கோவமாகப் பேசியுள்ளார். 107 நாள்களாக பிணைக்கைதிகளாக இருப்பதாக அவர்கள் கூறுவதால் இந்தக் காணொலி கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இஸ்ரேலின் தொடர் தாக்குதல்களால், துப்பாக்கிச்சூடுகள் மற்றும் குண்டு வெடிப்புகளுக்கு மத்தியில் உயிருக்குப்போராடி வருகிறோம் என ஒரு பெண் கோபமாகப் பேசியுள்ளார். ‘ஹமாஸை விட என் நாட்டைப் பார்த்தால்தான் எனக்கு இப்போது பயமாக உள்ளது’ என ஒரு பெண் தெரிவித்துள்ளது.

காஸாவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களால், பாலஸ்தீன மக்களோடு பல பிணைக்கைதிகளும் இறக்கிறார்கள் என ஹமாஸ் அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இஸ்ரேல் தன் தாக்குதல்களை நிறுத்தவில்லை. காஸா பகுதிக்குள் நடந்த துப்பாக்கிச் சண்டையில், வெள்ளைக் கொடியுடன், ‘நாங்கள் தீவிரவாதிகள் இல்லை’ எனக் கத்திய இஸ்ரேல் பிணைக்கைதிகள் மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் சுட்டுக்கொன்றது இஸ்ரேல். அதன் பின்னும் தாக்குதல்களை நிறுத்தவில்லை. காஸாவில் 22,000த்திற்கும் அதிகமான பாலஸ்தீன மக்களை கொலை செய்து வருகிறது இஸ்ரேல்.

இனப்படுகொலை குற்றங்களை இஸ்ரேல் உடனடியாக நிறுத்தவேண்டும், காஸாவிற்குள் மனிதநேய உதவிகளை அனுமதிக்க வேண்டும் என சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசா ஐநாவின் நீதிமன்றத்தில், காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் குற்றங்கள் வெளிப்படையாக போட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலுக்கு எதிராக இந்த வழக்கைத் தொடர்ந்த தென்னாப்பிரிக்க நாட்டின் அதிபர் அந்நாட்டு மக்களிடையே பேசிய காணொலியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். நீதிக்கான பாலஸ்தீன மக்களின் கண்ணீர் பொருட்படுத்தப்பட்டதாகவும் அவர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

சிலர் தென்னாப்பிரிக்கா மற்ற நாட்டு விவகாரங்களில் ஏன் தலையிடுகிறது என விமர்சித்ததாகவும் எங்கெல்லாம் மக்கள் இடப்பெயர்வையும் பாகுபாட்டையும் அரசு வன்முறையையும் எதிர்கொள்கிறதோ அது எங்கள் இடம்தான் என சிரில் குறிப்பிட்டுள்ளார். வரலாற்றில் இனபாகுபாட்டைச் சந்தித்த நாடு என்கிற முறையில் தங்களால் எது இனப்பாகுபாடு எனக் கண்டுகொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளார் சிரில் ரமபோசா.