ஸ்பெயினிலிருந்து நாளை தமிழகம் திரும்புகிறார் முதல்வர் ஸ்டாலின்!

”நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன்” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜனவரி 27 ஆம் தேதி வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயினுக்கு சென்றார். இவருடன் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவும் ஸ்பெயினுக்கு சென்று இருந்தார். அங்கு பல்வேறு தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்திற்கு தொழில் தொடங்க வர வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மேலும், முதலமைச்சர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:-

ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப். டால்கோ மற்றும் எடிபன் ஆகிய நிறுவனங்களின் உயர் நிர்வாகிகளுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொண்டேன். இந்தியாவின் உற்பத்தி தமிழ்நாட்டில் உள்ள எல்லையற்ற வாய்ப்புகளை அவர்களுக்கு எடுத்துரைத்தேன். எடிபன் நிறுவனத்துடன் ரூ.540 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொண்டது மகிழ்ச்சிக்குரியது.

நோய்த்தடுப்பு சிகிச்சையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டுள்ள Mabtree என்ற நிறுவனத்துடன் பயனுள்ள கலந்துரையாடலையும் மேற்கொண்டேன். இது ஸ்பெயின் நாட்டின் வெற்றிகரமான பயணத்தின் இறுதிக்கட்டம் ஆகும். இதுபோன்ற பலனளிக்கும் முடிவுகளுடன், நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். இது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியை அளிக்கிறது. அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கும் நன்றியுள்ளவனாவேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.