பாஜக ஆட்சியில் வேலையின்மை எனும் நோய் நாடு முழுதும் பரவிவருகிறது: ராகுல் காந்தி!

பாஜக ஆட்சியில் வேலையின்மை எனும் நோய் நாடு முழுதும் பரவிவருகிறது எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸின் நடைப்பயணம் ஒடிசா மாநிலத்தை அடைந்துள்ளது. அங்கு மக்களைச் சந்தித்துப் பேசிய அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டார். அதில் ‘படிப்பு மற்றும் வேலைவாய்ப்பிலிருந்து 40% இளைஞர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடும் அதே நேரத்தில்தான் 1 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பணியிடங்கள் காலியாக உள்ளன’ என அவர் கூறினார்.

மேலும் ’30 லட்சத்திற்கும் அதிகமான ஒடிசாவின் இளைஞர்கள் வெளி மாநிலங்களில் வேலை தேடி அலைகிறார்கள். மோடியின் ஆதரவால் வெளியிலிருந்து வந்த 30 கோடீஸ்வர தொழிலதிபர்கள் மாநிலத்தின் வளங்களைச் சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள்’ எனவும் அவர் குற்றம் சாட்டினார்.

‘காங்கிரஸ் உருவாக்கிய பொதுப்பணித்துறை நிறுவனங்களான ரயில்வே, துறைமுகம், விமான நிலையங்கள் எல்லாம் பாஜகவால் தனியாருக்கு விற்கப்படுகின்றன. ஜிஎஸ்டி-யை சீர்திருத்துவதன் மூலமும், கண்மூடித்தனமான தனியார்மயமாக்கலை நிறுத்தி, பொதுப்பணித்துறைகளை மீட்டெடுத்து, அரசின் காலிப் பணியிடங்களை நிரப்புவதன் மூலமும் புதிய பொருளாதார மாதிரியை உருவாக்குவதே நமது முதன்மைக் கடமை’ என ராகுல்காந்தி அந்தப் பதிவில் கூறியுள்ளார்.