தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது: அன்புமணி

“தமிழக அரசு – ஆளுநர் மோதல் தொடரக் கூடாது; தமிழகத்தின் வளர்ச்சிக்கு தடை ஏற்படுத்தக் கூடாது” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரை தொடங்கி வைப்பதற்காக வந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, அவருக்காக தயாரிக்கப்பட்ட உரையை படிக்க மறுத்திருக்கிறார். ஆளுநர் உரைக்கு முன்பாக தேசிய கீதம் இசைக்கப்படாததை கண்டித்தும், ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ள பல பகுதிகளில் தமக்கு உடன்பாடு இல்லை என்பதாலும் உரையை படிக்கவில்லை என்று ஆளுநர் குறிப்பிட்டிருக்கிறார். அதுமட்டுமின்றி, ஆளுநரின் உரையை முழுமையாக அவைக்குறிப்பில் ஏற்றுவதற்கான தீர்மானத்தை அவை முன்னவர் அமைச்சர் துரைமுருகன் கொண்டு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவையிலிருந்து வெளிநடப்பு செய்திருக்கிறார். ஆளுநரின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

கடந்த ஆண்டு ஆளுநர் உரையின் போது அவையில் என்னென்ன நிகழ்வுகள் நடந்தனவோ, அதேதான் இப்போதும் தொடர்ந்திருக்கின்றன. தமிழக அரசால் தயாரிக்கப்பட்ட ஆளுநர் உரைக்கு அவரது அலுவலகம் ஏற்கெனவே ஒப்புதல் அளித்திருக்கிறது. அதேபோல், ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் இசைப்பது தமிழக மரபல்ல என்று ஆளுநர் அலுவலகத்துக்கு தமிழக சட்டப்பேரவைச் செயலகம் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்பிறகு அவையில் உரையை வாசிக்காததும் வெளிநடப்பு செய்ததும் நியாயப்படுத்த முடியாதவை.

தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான மோதல் புதிதல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே இத்தகைய மோதல் தொடர்ந்து வருகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக அரசும் ஆளுநரும் இணைந்து செயல்பட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுநரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுநருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல. இப்போக்கு தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரும் தடையாக உருவாகிவிடும். இனியாவது இரு தரப்பும் நடந்ததை மறந்து தமிழகத்தின் முன்னேற்றத்துக்காக ஆளுநரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அன்புமணி கூறியுள்ளார்.