ஜார்க்கண்ட்டில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த முதல்வர் சம்பயி சோரன் உத்தரவு!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பிகாரைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை நடத்த அந்த மாநில முதல்வர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார்.

பிகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது. ஜார்க்கண்டில் ஆளும் கூட்டணியில் உள்ள பேரவை உறுப்பினர்களும் பேரவையில் கோரிக்கை எழுப்பி வந்தது. இந்த நிலையில், பிகார் மற்றும் ஆந்திரத்துக்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முதல்வர் சம்பயி சோரன் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் மாநிலங்களின் வரிசையில் மூன்றாவது மாநிலமாக ஜார்க்கண்ட் உள்ளது.

இதுதொடர்பாக முதல்வர் சம்பயி சோரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவா்களுக்கு அதிக பங்கு. தயாராகிறது ஜாா்க்கண்ட் என்று தெரிவித்துள்ளார். மேலும், கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடா்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை தயாரிக்க பணியாளா் நலத்துறைக்கு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். விரைவில் வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டு மாநில அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அண்டை மாநிலமான பிகாரில் மேற்கொள்ளப்பட்ட அதே முறையில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும். ஜாா்க்கண்டிலும் அதே அளவு காலம் தேவைப்படும். அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், மக்களவைத் தோ்தலுக்கு பின், கணக்கெடுப்புக்கான பணி தொடங்கும்’ என அவர் தெரிவித்துள்ளார்.