விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் மோடி அரசு உள்ளது: மல்லிகார்ஜுன கார்கே!

விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உள்ளது என்று காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் கார்கே தனது எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது:-

நாட்டின் விவசாயிகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் கொள்கைகளால் ஏழை விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி அரசின் பொய்யான உத்தரவாதத்தால் முதலில் நடைபெற்ற போராட்டத்தின்போது 750 விவசாயிகள் உயிரிழந்தனர். தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று ஒரு விவசாயி உயிரிழந்தார். 3 பேர் ரப்பர் தோட்டாக்களால் கண் பார்வை இழந்துள்ளனர்.

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலையை (எம்எஸ்பி) சட்டப்படி காங்கிரஸ் பெற்றுத் தரும்.
விவசாயிகளுக்கு சாதகமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு செயல்படவில்லை. நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு மோடி அரசுதுரோகம் இழைத்து வருகிறது. இந்த நிலை தடுக்கப்பட வேண்டும். காங்கிரஸ் என்றும் விவசாயிகளுக்கு துணையாக நிற்கும். இவ்வாறு அதில் கார்கே கூறியுள்ளார்.