பவதாரிணி மறைவு: இளையராஜாவின் வீட்டிற்கு சென்ற திருமாவளவன், அவருக்கு ஆறுதல்!

இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணி மரணம் அடைந்ததை அடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இளையராஜவுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.

இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி கடந்த ஜனவரி 25-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அதற்கு ஆயுர்வேத சிகிச்சை பெறுவதற்காக இலங்கை சென்ற நிலையில் அவர் அங்கே உயிரிழந்தார். அவரது மரணம் தமிழ் திரையுலகிலும், இசையுலகிலும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இதையடுத்து, இலங்கையில் இருந்து சென்னை கொண்டு வரப்பட்ட பவதாரணி உடலுக்கு ஏராளமான திரையுலக பிரபலங்களும், பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவரது சொந்த ஊரான தேனியில் உள்ள இளையராஜாவின் பண்ணை வீட்டின் பின்புறத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டிற்கு சென்று இளையராஜாவுக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் திருமாவளவன் வெளியிட்டுள்ள பதிவில், “உடல்நலக்குறைவால் காலமான இளையராஜாவின் மகள் பரதாரிணி அவர்களின் இல்லத்துக்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுததினேன். அவரை இழந்து வாடும் இளையராஜாவுக்கும் எனது இரங்கலை தெரிவித்தேன்” என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.