அரியலூர் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் மூழ்கிய 3 இளைஞர்கள் மாயம்!

அரியலூர் – திருமானூர் கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் மூழ்கிய 3 இளைஞர்களைத் தேடும் பணியில் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர், ஒரு வேன் மற்றும் ஒரு காரில் தஞ்சாவூருக்கு நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு வந்துள்ளனர். அரியலூர் மாவட்டம் திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் பகுதியில் வந்தபோது கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் கொஞ்சமாக செல்வதை கண்ட வேனில் வந்த இளைஞர்கள் 10 பேர் குளிக்க நினைத்துள்ளனர். இதையடுத்து திருமானூர் கொள்ளிடம் ஆற்றின் கரையில் வேனை நிறுத்திவிட்டு ஆற்றில் குளித்துள்ளனர்.

கொள்ளிடம் ஆற்றில் தற்போது திருமானூரை ஒட்டிய நிலையில் கரையோரத்தில் தண்ணீர் சென்று கொண்டுள்ளது. அதிக வெள்ளம் வந்தபோது பாலத்தின் ஓர பகுதியில் சுமார் 30 அடிக்கும் மேலாக பள்ளம் ஏற்றப்பட்டுள்ளது. இப்பகுதியில் தற்போது அதிகளவு தண்ணீர் தேங்கியும் நிற்கிறது. இதனை அறியாத இளைஞர்கள் ஆர்வத்துடன் குளித்துள்ளனர். அரை மணி நேரத்துக்கும் மேலாக குளித்த நிலையில் சந்தானம்(16), பச்சையப்பன்(15), தீனதயாளன்(20 ஆகிய 3 இளைஞர்கள் தண்ணீரில் மூழ்கியதாக தெரிகிறது. உடன் குளித்த இளைஞர்கள் 3 பேரை காணவில்லை என்பதை அறிந்து கரைக்கு திரும்பினர். இதையடுத்து காரில் சென்றவர்களுக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு திருமானூர் போலீஸார் மற்றும் அரியலூர் தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து நீரில் மூழ்கிய 3 இளைஞர்களை தேடி வருகின்றனர்.