விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்பு: சபாநாயகர் அப்பாவு!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த விஜயதரணியின் ராஜினாமா கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

நெல்லையில் சபாநாயகர் அப்பாவு இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், சட்டமன்ற உறுப்பினர் செல்வப்பெருந்தகை, அரசியலமைப்புச் சட்டத்தின்படி, காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி பாஜகவில் சேர்ந்துவிட்டார். எனவே, அவரை உடனடியாக பதவிநீக்கம் செய்யக்கோரி சட்டப்பேரவைத் தலைவர் மற்றும் முதன்மைச் செயலருக்கும் அனுப்பி வைத்தார். அதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற உறுப்பினர் விஜயதரணியும், தனது பதவி விலகல் கடிதத்தினை தன்னுடைய கைப்பட எழுதி, இணைய வழியில் என்னுடைய கவனத்துக்கும் சட்டப்பேரவையின் முதன்மைச் செயலரின் கவனத்துக்கும் அனுப்பினார். இந்த இரண்டு கடிதங்கள் குறித்த விவரங்களை முதன்மைச் செயலர் என்னுடைய கவனத்துக்கு அனுப்பிவைத்தார். அதை நான் பரிசீலனை செய்து பார்த்ததில், விஜயதரணி, முறைப்படி தன்னுடைய கைப்பட பதவி விலகல் கடிதம் கொடுத்திருப்பதைத் தெரிந்துகொண்டேன்.

மீண்டும், விஜயதரணி இன்று காலை என்னை தொலைபேசியில் அழைத்து அந்த கடிதத்தை நான்தான் எனது கைப்பட எழுதி அனுப்பியிருக்கிறேன். நான் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்டேன். எனவே, காங்கிரஸ் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நான் விலகுவதாக என்னிடம் தெரிவித்தார். நான் அவரிடம் சட்டப்படி ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தேன். கடிதங்களை ஆய்வு செய்து பார்த்ததில், முறையாக விஜயதரணி பதவி விலகல் கடிதம் கொடுத்துள்ளார். எனவே, அவரது பதவி விலகலை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதுதொடர்பான ஆவணங்கள் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும். பின்னர், விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பது குறித்து முறைப்படி அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.