சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை: உயர்நீதிமன்றம்!

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த மனுக்கள் நீதிபதிகள் N.சதீஷ்குமார், D.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை குறித்த அறிக்கையை அரசு வழக்கறிஞர் தாக்கல் செய்தார். அதில், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக அரசு இதுவரை 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அரசின் இந்த அறிக்கைக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை என சுட்டிக்காட்டியதுடன், கடமைக்காக இந்த வழக்கை நடத்துவது போல் உள்ளதாக கூறினர்.

வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேலை மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்வதாக கூறிய நீதிபதிகள், சமதள பகுதிகளில் உள்ள மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்? என கேள்வி எழுப்பினர். ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை எனக் கூறிய நீதிபதிகள், சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை எனவும் கூறினர். சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு அரசு ஏன் இவ்வளவு செலவு செய்ய வேண்டுமென கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அந்த பணியை ஏலத்தில் விடலாமே என்றும் கேள்வி எழுப்பினர். இதனையடுத்து, வழக்கின் விசாரணையை நாளைக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இதனிடையே கடந்த 2022 ஆம் ஆண்டு நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள முதுமலை, ஆனைமலை வனப்பகுதிகளில் 200 ஹெக்டேர் பரப்பில் வளர்ந்திருந்த சீமை கருவேலமரங்கள் முழுமையாக அகறறப்பட்டது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 1.93 லட்சம் ஹெக்டேர் பரப்பு நீர் நிலைகளில் சீமைக் கருவேல மரங்கள் வளர்ந்திருப்பது அடையாளம் காணப்பட்டதாகவும் அதில் 70 ஆயிரத்து 294 ஹெக்டேர் பரப்பில் இருந்த சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்டுவிட்டதாகவும் கடந்த 2022ஆம் ஆண்டு அரசுத் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது கவனிக்கத்தக்கது.