தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது: மத்திய அமைச்சர் வி.கே.சிங்!

தமிழகத்தில் பாஜகவுக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.

மத்திய சாலை மற்றும் விமானப்போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று காலை கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் நாகர்கோவில் வந்த அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜகவுக்கு பிரகாசமான வெற்றி வாய்ப்பு உள்ளது. குமரியில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. விமான நிலையம் அமைக்க தக்க இடத்தை மாநில அரசு தேர்வு செய்துதர வேண்டும். ஆனால், மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளரை தலைமை முடிவு செய்யும். தமிழகத்துக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்க பல்வேறு வழிமுறைகள் உள்ளன. அதன்படி, மத்திய அரசு நிவாரணம் வழங்கும். தமிழகத்தில் திமுக குடும்ப அரசியல் நடத்தி வருவது அனைவருக்கும் தெரிந்ததுதான். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டணி குறித்து கேட்டபோது, “அ‌திமுக மட்டுமல்ல, திமுக உட்பட யார் வந்தாலும் எங்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம்” என்று நகைத்தபடி கூறினார்.