அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் ஐடி விங் மாநிலத் தலைவர், மாநிலப் பொறுப்பாளர்கள், மண்டலப் பொறுப்பாளர்கள் பதவிகளுக்கும் நிர்வாகிகளை நியமித்துள்ளார் ஓபிஎஸ்.
கடந்த 2022 ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை ஏற்பட்டதைத் தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம் கட்சியை விட்டு நீக்கப்பட்டு, அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் எடப்பாடி பழனிசாமி. பின்னர் பல கட்டங்களாக ஓபிஎஸ் சட்டப் போராட்டம் நடத்திய நிலையில், நீதிமன்றங்களில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராக தேர்தல் ஆணையமும் அங்கீகரித்தது. அதைத்தொடர்ந்து, அதிமுகவின் கொடி, பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ.பி.எஸ் பயன்படுத்தக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எடப்பாடி பழனிசாமி. இந்த வழக்கில், அதிமுக பெயர் கொடி, சின்னங்களை பயன்படுத்த ஓ.பி.எஸ் தரப்புக்கு தடை விதித்து உத்தரவிட்டது உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த நிலையில், உச்ச நீதிமன்றமும் ஐகோர்ட் தீர்ப்பையே உறுதி செய்தது.
இதையடுத்து, அதிமுக கட்சிக் கரை வேட்டி, அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருந்து வரும் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வந்தார். அதேசமயம், ஓ.பன்னீர்செல்வம் வெளியிடும் அறிக்கைகள், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் என தமிழ்நாடு அரசு முத்திரையுடன் கூடிய லெட்டர் ஹெட்டிலேயே வெளியிடப்பட்டு வந்தன. இந்நிலையில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் அமைந்த லெட்டர் ஹெட் உடன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். அதில், “அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் குழுவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளாக கீழ்க்கண்டவர்கள் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிடும் முக்கிய அறிவிப்பு என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில், கருப்பு வெள்ளை சிவப்பு எனும் அதிக கொடி நிறமும் இடம்பெற்றுள்ளது. இதன் மூலம், ஓபிஎஸ், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் புதிய இயக்கத்தை தொடங்கிவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற புதிய பெயரில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிட்டுள்ளதன் மூலம், ஓபிஎஸ், சைலண்டாக புதிய கட்சியைத் தொடங்கி விட்டார் என்றும் தகவல்கள் பரபரக்கின்றன.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில தலைவராக சுஜைனி எஸ்.எஸ்.ஆர் மருது பாண்டியன், மாநில பொறுப்பாளர்களாக ராஜகோபால், ரமணிகாந்த், கீதாலட்சுமி விவேக், விஜய் பரத், ராஜப்பா, கேசி ராம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தகவல் தொழில்நுட்ப அணி சென்னை மண்டல பொறுப்பாளராக சரவணன், திருவள்ளூர் மண்டல பொறுப்பாளராக ஆதி.ராம்குமார், திருச்சி மண்டல பொறுப்பாளராக சி.ராமச்சந்திரன், மதுரை மண்டலப் பொறுப்பாளராக நவநீதன், சேலம் மண்டலப் பொறுப்பாளராக கே.சி.லட்சுமணன், கோவை மண்டல பொறுப்பாளராக மணிகண்டன் ரவிச்சந்திரன், வேலூர் மண்டல பொறுப்பாளராக எம்.செண்பகராஜ், விழுப்புரம் மண்டலப் பொறுப்பாளராக துரை சேது மாதவன், திருநெல்வேலி மண்டல பொறுப்பாளராக டூரிங் ஆன்றனி தனிஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
