காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும்: அமித் ஷா

காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார்.

தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ள ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களின் சில பகுதிகளில் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டம் அமலில் உள்ளது. பொது ஒழுங்கை பராமரிப்பதற்காகவும், சந்தேகப்படும் இடங்களில் தேடுதல் வேட்டை நடத்தவும் சந்தேக நபர்களை கைது செய்யவும், தேவைப்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்தவும் ஆயுதப் படை வீரர்களுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜம்மு காஷ்மீர் ஊடக குழுமத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் இருந்து ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை திரும்பப் பெறுவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. மேலும் அங்கிருந்து ராணுவத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, சட்டம் ஒழுங்கு விவகாரத்தை காஷ்மீர் போலீஸாரிடம் ஒப்படைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. காஷ்மீரில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் வாக்குறுதி. இது நிறைவேற்றப்படும். எனினும், அந்த ஜனநாயகம் குறிப்பிட்ட 3 குடும்பங்களுக்கு மட்டுமே உரியதாகிவிடக் கூடாது. அது மக்களுக்கான ஜனநாயகமாக இருக்க வேண்டும். காஷ்மீரில் வரும் செப்டம்பருக்குள் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.