100 நாள் வேலை திட்ட ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது!

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த ஊதியத்தை மத்திய அரசு அதிகரித்துள்ளது.

2024-25 நிதி ஆண்டில் ஊதிய உயர்வுக்கான அரசாணையை மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். இதன் மூலம் தொழிலாளர்களுக்கு ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.

கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006-ம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

இந்த நிலையில், இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி ஊதியத்தை மத்திய அரசு தற்போது உயர்த்தியுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.28 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வு வரும் ஏப்.1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் ஊதிய உயர்வு வேறுபடுகிறது. 3 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. அந்த வகையில், ஹரியாணா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.357-ல் இருந்து ரூ.374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் ரூ.255-ல் இருந்து ரூ.266 ஆகவும், பிகார், ஜார்க்கண்டில் ரூ.228-ல் இருந்து ரூ.245 ஆகவும், சத்தீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.221-ல் இருந்து ரூ.243 ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2023-24 நிதி ஆண்டுக்கு இந்த திட்டத்தின்கீழ் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்படுகிறது. வரும் 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 சதவீத உயர்வு ஆகும். ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளன. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி தொடங்குவதால், தேர்தலுக்கான நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் இந்த உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், திருத்தப்பட்ட ஊதிய உயர்வை அறிவிக்க தேர்தல் ஆணையத்தின் அனுமதியை அண்மையில் பெற்றுள்ளதாக ஊரக வளர்ச்சி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.