போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான்: கனிமொழி!

“போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம். நானும் இருக்கேன் நானும், இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது” தான் என திமுக எம்.பி கனிமொழி கூறியுள்ளார்.

கோவை தொகுதி திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரை ஆதரித்து கனிமொழி இன்று வெள்ளிக்கிழமை பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

ஒருவேளை பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இனிமேல் தேர்தல் என்பதே நடைபெறாது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே கிடையாது. அப்படிப்பட்ட ஒரு விபத்து நடந்தால் இதுதான் இந்தியாவின் கடைசி தேர்தல் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். பாஜகவினர் எந்த சட்டம் வேண்டுமென்றாலும் கொண்டு வருகிறார்கள். விவசாயிகளுக்கு எதிரான சட்டம், தொழிலாளர்களுக்கு எதிரான சட்டம், சிறுபான்மையினருக்கு எதிரான சட்டம் என இவற்றை கொண்டு வந்தபோது கைத்தட்டி நாங்கள் அதை வரவேற்கிறோம் என ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்தவர்கள்தான் அதிமுகவினர். இன்று எடப்பாடி நாங்கள் வேறு, அவர்கள் வேறு என்று கூறுகிறார். எங்களுக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் கிடையாது என சொல்கிறார், இதை யாரும் நம்ப வேண்டாம், மக்களுக்கு நடந்த அத்தனை கொடுமைகளுக்கும் அதிமுகவினருக்கு பங்கு இருக்கிறது. இன்று பிரிந்தவர்கள், நாளை மறுபடியும் இரண்டு ஸ்டிக்கர்களையும் சேர்த்து ஒட்டிக் கொள்வார்கள்.

போட்டி அதிமுகவுக்கும் திமுகவுக்கும் தான். பாஜக பாவம். நானும் இருக்கேன் நானும். இருக்கேன் என்று சொல்லிக் கொண்டிருக்க வேண்டியது தான். எடப்பாடி பழனிசாமி இதுவரை பாஜகவையோ பிரதமர் மோடியை விமர்சனம் செய்து பேசியிருக்கிறாரா?.. எடப்பாடி பழனிசாமி இதை சட்டசபை தேர்தலாக கருதிக் கொண்டு, முதல்வரை பற்றிதான் பேசி வருகிறாரே தவிர, மோடியை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ஏனென்றால் திரும்பவும் சென்று கைகட்டி நிற்க வேண்டும்.

அண்ணாமலை மூன்றாவது இடத்திற்கு தான் போட்டியிட வேண்டும். வெற்றி திமுகவுக்குதான் என்பது அசைக்க முடியாத உண்மை. ஆனால் தினமும் பேட்டி கொடுத்து தவறான தகவல்களை அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருக்கலாம். அண்ணாமலை 20,000 புத்தகங்களை படித்தவர். ஐந்து வயதிலிருந்து படிக்க ஆரம்பித்து இருந்தால்கூட ஒரு நாளைக்கு இரண்டு புத்தகங்களை தான் படித்திருக்க முடியும். எப்படி இத்தனை புத்தகங்களை படித்திருக்க முடியும்? படித்த புத்தகத்திலும் உண்மை கிடையாது.

நான் இட ஒதுக்கீட்டில் வரவில்லை என பெருமையாக சொல்லிக் கொள்கிறார். இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் உங்களைவிட குறைந்த மதிப்பெண் பெற்றவர்களா? உங்களைவிட சிறப்பாக செயல்படக்கூடியவர்கள், அறிவு இருக்கக்கூடியவர்கள், புத்திசாலித்தனம், நல்ல மனது இருக்கக்கூடியவர்கள் தான், மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி கொடுத்த இட ஒதுக்கீட்டில்தான் நீங்கள் வந்திருக்கிறீர்கள் என்பதை நமது சகோதரர்கள் தேடி கண்டுபிடித்து விட்டார்கள்.

உண்மையை ஒப்புக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாளும் பொய் கூறினால் நமக்கே குழப்பி விடும். அந்த கட்சி செயல்படுவது அப்படித்தான். பொய் செய்திகளை ஒரு குழு மூலம் பரப்பி, மத ரீதியான பிரச்னைகளை பாஜக ஏற்படுத்துகிறது. பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களால் நிம்மதியாக வாழ முடியவில்லை. தமிழகத்தில் நாம் தற்போது நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், வசதியாக இருக்க வேண்டும் என்பதுதான் நமது கனவு. ஆனால் மணிப்பூரில் இருக்கக்கூடிய மக்களின் கனவு என்னவென்றால், என்னுடைய குழந்தைகளை உயிரோடு பாதுகாக்க வேண்டும், என் குழந்தையை காணவில்லை அவர்கள் உயிருடன் வருவார்களா, அவர்கள் உயிரோடு வந்தால் போதும் எனக்கு வேறு ஒன்றும் தேவையில்லை என நினைக்கிறார்கள். இதுதான் பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களில் உள்ள நிலைமை.

மணிப்பூரில் இரண்டு பெண்கள் ஆயிரம் பேரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார்கள், கொடூரமாக நடத்தப்பட்டார்கள், ஒரு நாளாவது பிரதமர் அவர்களைச் சந்தித்து எப்படி இருக்கிறார்கள் என கேட்டாரா?. பாஜகவை சேர்ந்த 44 எம்பிக்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் கொடுமைகள் இரண்டு மடங்கு அதிகரித்து இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.