ஆர்.எம்.வீரப்பன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்!

வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக ஆர்.எம்.வீரப்பன், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பகல் அவர் காலமானார்.

தமிழகத்தில் மூத்த திராவிட அரசியல் தலைவர்களில் ஆர்.எம்.வீரப்பன் முக்கியமானவர். மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில், அவரது அமைச்சரவையில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக இருந்தவர். அதேபோல், மறைந்த முதல்வர்களான ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகியோரது அமைச்சரவைகளிலும் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்தாலும், திமுக தலைவரான கருணாநிதி மற்றும் திமுகவைச் சேர்ந்த தலைவர்கள் உடனும் நட்பில் இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன். அதிமுகவில் இருந்து விலகிய பிறகு எம்ஜிஆர் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியவர் ஆர்.எம்.வீரப்பன். திரைத் துறையில் எம்ஜிஆருக்கு வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன், சத்யா மூவிஸ் நிறுனத்தை தொடங்கி பல திரைப்படங்களை தயாரித்தவர் ஆர்.எம்.வீரப்பன். உடல்நலக்குறைவு காரணமாக மறைந்த ஆர்.எம்.வீரப்பனுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள், திரை உலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின்:

திராவிட இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் மறைவுற்ற செய்தியறிந்து மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அடைந்தேன். அவரது 98-வது பிறந்த நாளான கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9-ம் தேதி நேரில் அவரது இல்லத்துக்கே சென்று அவரைச் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்த நினைவுகள் நிழலாடுகின்றன. அரசியலில் மட்டுமின்றி, திரைத்துறையிலும் வரலாற்று முத்திரையைப் பதித்துள்ள ஆர்.எம்.வீரப்பன், நூறாண்டுகளும் கடந்து நிறைவாழ்வு வாழ்வார் என்ற எம் போன்ற அவரது நலம் விரும்பிகளின் எதிர்பார்ப்பு, எதிர்பாராத விதமாக நிறைவேறாமல் போயிருப்பது வருத்தமளிக்கிறது.

ஆர்.எம்.வீ என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் ஆர்.எம்.வீரப்பன், பெரியார், அண்ணா, எம்ஜிஆர், மறைந்த முதல்வர் கருணாநிதி என அனைத்து தலைவர்களுடனும் நெருக்கமும், நட்பும் கொண்டிருந்தவர். எம்ஜிஆரின் மனச்சாட்சியாகவும், நிழலாகவும் கருதப்பட்ட ஆளுமையாக அரசியலில் வலம் வந்தவர். அவரது அமைச்சரவையில் இடம்பெற்று செய்தி மக்கள் தொடர்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு அமைச்சராகவும் பணியாற்றிப் புகழ் பெற்றவர். பின்னாளில், எம்ஜிஆர் கழகம் என்று தமக்கென தனி இயக்கம் கண்டாலும், திமுகவுடனும், மறைந்த முதல்வர் கருணாநிதியுடனும் அரசியல் ரீதியாக மட்டுமின்றி, தனிப்பட்ட முறையிலும் நல்லுறவையும், நட்பையும் பேணி வந்தார். அதே அன்பையும், பரிவையும் என்னிடத்திலும் அவர் காட்டி வந்தார்.

எம்ஜிஆரின் சத்யா மூவீஸ் நிறுவனத்தைத் திறம்பட நிர்வகித்து தமிழ்த்திரையுலகுக்கு பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்த சிறந்த தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். அத்துடன், அவரது தமிழ்ப் பற்று காரணமாக சென்னை கம்பன் கழகத்துக்கும் தலைவராகப் பொறுப்பேற்று, இலக்கியத்துறையிலும் தனது தடத்தைப் பதித்தார். அத்துடன், ஆழ்வார்கள் ஆய்வுமையம் என்ற அமைப்பின் தலைவராகப் பணியாற்றி, ஆன்மிகத்துறையிலும் ஈடுபாடு கொண்டவராக அவர் இருந்து வந்தார். அரசியல், திரைத்துறை, தமிழ்த்துறை, ஆன்மிகம் என்று அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்த ஆர்.எம்.வீரப்பன் , அரசியல் வேறுபாடுகளைக் கடந்து அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்படும் பேராளுமையாகத் திகழ்ந்தார்.

அவரது மறைவு, அரசியல் உலகுக்கு மட்டுமின்றி, அவர் இயங்கி வந்த திரையுலம், இலக்கியம், ஆன்மிகம் உள்ளிட்ட அனைத்துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது துணைவியார், குடும்பத்தினர் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். திராவிட இயக்கம் இருக்கும் வரை ஆர்.எம்.வீரப்பனின் புகழும் நிலைத்திருக்கும்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி:

எம்ஜிஆர் கழக நிறுவனரும், முன்னாள் அமைச்சரும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பன் வயது முதிர்வால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். அண்ணன் ஆர்.எம்.வீரப்பன், மறைந்த முதல்வர் எம்ஜிஆர் அதிமுகவைத் தொடங்கும் போது அவருக்கு உறுதுணையாகவும், தொடர்ந்து அவரது அமைச்சரவையில் அமைச்சராகவும்; அதே போல், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா காலத்தில் கட்சியின் இணைப் பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் ஆர்.எம். வீரப்பனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உற்றார் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதிபெற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை:

திராவிட இயக்க மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், எம்ஜிஆர் கழகத்தின் நிறுவனருமான ஆர்.எம். வீரப்பன் தனது 98-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். நீண்ட நெடிய அரசியல் வாழ்க்கையில் பன்முகத்தன்மை கொண்டவராக விளங்கினார். பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோரின் அன்பையும், நம்பிக்கையையும் பெற்றவர். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் முதன்மை தளபதியாக விளங்கியவர். அரசியல், திரைப்படத்துறை, தமிழ்ப் பணி, ஆன்மிகம் என அனைத்து துறைகளிலும் தமது ஈடுபாட்டின் மூலம் முத்திரை பதித்தவர்.

இலக்கிய ஆர்வத்தின் காரணமாக கம்பன் கழகத்தின் தலைவராக நீண்டகாலம் பணியாற்றி இணையற்ற இலக்கியப் பணியாற்றியவர். ஆர்.எம். வீரப்பன் மறைவு தமிழக அரசியலுக்கும், திரைத்துறைக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரை உலகத்தினர் மற்றும் அவரது கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர்:

புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்த முன்னாள் அமைச்சர் அருமை அண்ணன் ஆர்.எம். வீரப்பன். வயது மூப்பின் காரணத்தால் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார் எனும் செய்தி அறிந்து மன வருத்தமும், வேதனையும் அடைகிறேன். சாதாரண குடும்பத்தில் பிறந்து தொடக்க காலத்தில் நாடகங்களில் நடித்தும், நாடக கம்பெனிகளில் பணியாற்றியும், பெரியார், அண்ணா போன்றவர்களால் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டவராய் தன்னை இணைத்துக் கொண்டு அரசியல் உலகிலும், கலை உலகிலும் பிரவேசித்து புகழ் கொடி நாட்டினார். மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் திரைப்பட கம்பெனியின் மேலாளராக பணியாற்றத் தொடங்கி எம்ஜிஆரின் வலது கரமாய் , நம்பிக்கை நட்சத்திரமாய் திகழ்ந்தவர்.

எம்ஜிஆர் திரையுலகில் உயர்ந்திடவும், பல திரைப்படங்களில் வெற்றிகளை அடைந்திடவும் துணை நின்றவர். பிறகு சத்யா மூவீஸ் எனும் திரைப்பட நிறுவனத்தை துவங்கி எம்ஜிஆர், ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்ற முன்னணி கதாநாயகர்களை கொண்டு ஏராளமான வெற்றிப் படங்களை தமிழ் திரையுலகில் தயாரித்து வெற்றிக் கொடி நாட்டியவர். எம்ஜிஆரின் அமைச்சரவையில் அறநிலையத் துறை போன்ற முக்கிய துறைகளை ஏற்று அருளாளர் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். ஆலயத் திருப்பணிகளை அற்புதமாய் செய்து பெருமை பெற்றவர். கம்பன் கழகம் போன்ற பல்வேறு தமிழ் அமைப்புகளில் தலைமையேற்றும், பங்கேற்றும் மிகச் சிறந்த சொற் பொழிவாளராய் தமிழ் தொண்டாற்றினார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அமைச்சரவையில் இருந்து திறம்பட செயல்பட்டார். எம்ஜிஆர் கழகம் எனும் கட்சியை தொடங்கி மறைந்த முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகவும் துணையாகவும் நின்றார். அரசியல் உலகில் என் போன்ற பலரை உருவாக்கிய பெருமைக்குரியவர். சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக அமைச்சர்களாக, மக்கள் பிரதிநிதிகளாக பலரை உருவாக்கியவர். அவரால் பொறுப்புக்களையும் பலர் பெற்றனர்.

பல்லாண்டுகள் அமைச்சராக பணியாற்றி இருந்தாலும், எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆட்படாமல், கரைபடியா கரத்தோடு, நேர்மையானவராக திகழ்ந்தவர். அன்பும் பாசமும் நிறைந்தவர், பழகுவதற்கு இனியவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். அவர் புதுக்கோட்டை மாவட்டத்துக்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்த்தார். சுமார் 50 ஆண்டுகளாக அவரோடு நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றிருந்தேன். அவரது மறைவு தனிப்பட்ட முறையில் என் போன்றவர்களுக்கு பேரிழப்பாகும், அவரது மறைவால் தமிழக அரசியல் ஒரு நேர்மையான அரசியல் தலைவரை இழந்து நிற்கிறது.

அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை துயருடன் தெரிவித்துக் கொள்கிறேன். அவரை இழந்து வாடும் அவருடைய துணைவியார், மகன்கள், மகள்கள் உறவினர்கள் நண்பர்கள் மற்றும் இயக்கத்தினர் ஆகியோருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான ஆர்.எம்.வீரப்பனின் இறுதிச் சடங்கை அரசு மரியாதையுடன் நடத்த வேண்டுமென்று தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.