மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை: பாஜக எம்பி பிரிஜ் பூஷன் நீதிமன்றத்தில் ஆஜர்!

மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று பாஜக எம்பி பிரஜ் பூஷன் ஆஜராகியுள்ளார். வழக்கின் மீதான தீர்ப்பு ஏப்.26ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.

இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக இருந்த இந்த காலத்தில் பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு ஜனவரியில் இது தொடர்பாக ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர்கள் டெல்லியின் ஜந்தர் மந்தர் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை கிளப்பியது. நாட்டின் கொடியை சர்வதேச அரங்கில் உயர்த்த வீராங்கனைகள் இந்த கொடுமைகளை எல்லாம் தாங்கிக்கொள்ள வேண்டுமா? என்று அரசியல் கட்சியினர் கேள்வியெழுப்பினர்.

இந்த போராட்டத்தையடுத்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் மேரிகோம் தலைமையில் குழு ஒன்றை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட வீராங்கனைகள், வீரர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார்களை அளித்தனர். பின்னர் போராட்டம் தற்காலிகமாக திரும்பப்பெறப்பட்டது. ஆனால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டு 3 மாதங்கள் கடந்த பின்னரும் கூட, பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான பாலியல் புகாரை விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால் வீரர்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்தனர். இது மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.

நிலைமையை சமாளிக்க இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலில் பிரிஜ் பூஷனுக்கு தொடர்புடைய யாரும் போட்டியிட மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மல்யுத்த போட்டியிலிருந்தே விலகுவதாக வீராங்கனை சாக்ஷி மாலிக் கண்ணீர் மல்க பேட்டியளித்திருந்தார். இது நாடு முழுவதும் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியது.

இதன் தொடர்ச்சியாக பத்மஸ்ரீ விருது பெற்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, விரேந்திர சிங் உள்ளிட்டோர் தங்களது விருதை திரும்ப ஒப்படைப்பதாக கூறியிருந்தனர். இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இன்று இந்த மனு இறுதி விசாரணைக்கு வந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு வரும் 26ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி பிரியங்கா ராஜ்பூத் கூறியுள்ளார்.