பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல் காந்தி!

நாட்டின் ஜனநாயக கட்டமைப்பை பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் தாக்குவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவு 29 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு நாளை நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் தொண்டர்களை வாழ்த்தி ராகுல் காந்தி விடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், அவர் பேசியதாவது:-

காங்கிரஸின் முதுகெலும்பு கட்சியின் தொண்டர்களாகிய நீங்கள்தான். பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் நாட்டின் கருத்துக்கு எதிராக உள்ளனர். அரசியலமைப்பு, ஜனநாயக கட்டமைப்பு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துகிறார்கள்.

நீங்கள் ஆர்எஸ்எஸின் சித்தாந்தங்களுக்கு எதிராக தெருக்களிலும், கிராமங்களிலும், நாட்டின் ஒவ்வொரு மூளையிலும் போராடி வருகிறீர்கள். நீங்கள்தான் பாதுகாவலர்கள். தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மக்கள் பிரச்னைகளை கொண்டுவர எங்களுக்கு உதவியுள்ளீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகள். பாஜகவின் சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.