ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் பலியாகும் பாலஸ்தீன குழந்தைகள்: ஐநா

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் போர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. அதாவது ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் காசாவில் ஒரு குழந்தை போரால் உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று ஐநா கூறியுள்ளது.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தை தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐநா பணியாளர்களை ஏற்றி சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர். எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. ஆனால், போர் தற்போதுவரை நிற்கவில்லை. 34,000க்கும் அதிகமானவர்கள் இந்த போரில் உயிரிழந்துள்ளனர். இதில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்களும், குழந்தைகளும்தான். மட்டுமல்லாது போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

இதற்கிடையில் போர் நிறுத்தம் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் பாலஸ்தீன ஆதரவு நாடுகள் கொண்டுவரும் தீர்மானங்களை, அமெரிக்காவும், பிரிட்டனும் தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்து வருகிறது. எனவே இந்த போர் மத்திய கிழக்கு முழுவதும் பரவும் அபாயம் எழுந்திருக்கிறது.

இந்நிலையில் பாலஸ்தீனத்தின் தற்போதைய நிலை குறித்து ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் (UNICEF) வெளியிட்டுள்ள சில தகவல்கள் பெரும் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. அதாவது இஸ்ரேல் தொடுத்துள்ள போர் காரணமாக பாலஸ்தீனத்தில் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு குழந்தை உயிரிழக்கிறது அல்லது படுகாயமடைகிறது என்று கூறியிருக்கிறது. தற்போது காசாவின் ரஃபா நகரின் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று நடந்த தாக்குதலில் சுமார் 10 பேர் உயிரிழந்திருக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி தொடங்கி தற்போது வரை 34,049 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 76,901 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 37 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 68 பேர் காயமடைந்துள்ளார்கள்.