உலகில் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறும் ஐரோப்பா!

உலகிலேயே ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஆய்வறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது.

ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில் தான் இந்த அதிர்ச்சித் தகவல் இடம்பெற்றுள்ளது. இதனால் ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினால் இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கியுள்ளது. ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாகவே இருந்தது என்ற தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

2015-ம் ஆண்டு பாரீஸில் காலநிலை தொடர்பாக 195 நாடுகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகள் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டால் ஐரோப்பிய கண்டத்தில் தொழில்புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் உயர்ந்து வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியாக அதிகரித்துள்ளது. இதனால். ஐரோப்பாவில் வெப்ப அழுத்தம், காட்டுத் தீ, வெப்ப அலைகள், பனிப்பாறைகள் உருகுதல், பனியளவு குறைவு, பனிப்பொழிவு இல்லாமை போன்ற காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் நீண்டு கொண்டே செல்கின்றன என்று ஐரோப்பிய யூனியன் செயலாக்கக் குழு துணை தலைவர் கோபர்னிகஸ் கூறுகிறார்.

டபிள்யுஎம்ஓ (WMO) அறிக்கையானது இந்த ஆண்டு ஓர் எச்சரிக்கைக் குறிப்புடன் வந்துள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க இந்த உலக நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது இன்னும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று அந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

உலகளவில் மார்ச் 2024, தொடர்ச்சியாக 10வது அதீத வெப்பநிலை கொண்ட மாதமாக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் சமுத்திரங்களின் கடல் மேல்பரப்பின் சராசரி வெப்ப அளவு 2023-ல் மிக அதிகமாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. அதீத வெப்பத்தால் ஐரோப்பிய கண்டத்தில் மனித உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புயல், வெள்ளம், காட்டுத்தீக்கு 150 உயிர்கள் இரையாகின. 2023-ல் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 13.4 பில்லியன் யூரோக்களை எட்டியது.

இயல்புக்கு மாறான காலநிலைகளால் வெப்ப அலைகள், காட்டுத் தீ, வறட்சி, வெள்ளம் ஆகியன ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஆல்ஃப்ஸ் மலையில் கடந்த இரண்டாண்டுகளில் 10 சதவீத பனிப் பாறைக்ள் உருகியுள்ளன. இவ்வாறாக அந்த ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.