2.5 லட்சம் புத்தகங்கள் கொடை அளித்துள்ளேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உலக புத்தக தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளதாவது:-

புதிய உலகத்துக்கான திறவுகோல், அறிவின் ஊற்று, கல்விக்கான அடித்தளம், சிந்தனைக்கான தூண்டுகோல், மாற்றத்துக்கான கருவி, மக்களை உணர வழிகாட்டி எனப் புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை.

புத்தகங்களை வாசியுங்கள் – நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள். புத்தகங்களைப் பரிமாறிக் கொள்வதை ஓர் இயக்கம் என நான் தொடங்கியது முதல் பெறப்பட்ட இரண்டரை லட்சம் புத்தகங்களுக்கு மேல், பல மாணவர்களுக்கும் நூலகங்களுக்கும் கொடையளித்துள்ளேன்.கையில் புத்தகங்கள் தவழட்டும், சிந்தனைகள் பெருகட்டும், நல்வழி பிறக்கட்டும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.