மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க காங்கிரஸ் திட்டம்: பிரதமர் மோடி!

“எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி மக்களின் உரிமைகளை காங்கிரஸ் கட்சி பறிக்க நினைக்கிறது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி இட ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.” என்று சத்தீஸ்கர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலம் சுர்குஜாவில் நடந்து வரும் பாஜக பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி பேசியதாவது:-

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியானபோதே அதில் முஸ்லிம் லீக்கின் முத்திரை இருப்பதாக கூறியிருந்தேன். அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, இந்தியாவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு கிடையாது என்று அம்பேத்கர் தலைமையில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், காங்கிரஸ் வாக்கு வங்கிக்காக அம்பேத்கரின் வார்த்தைகள் மீது அக்கறை கொள்ளவில்லை. அரசியலமைப்பின் புனிதம் பற்றியும் கவலை கொள்ளவில்லை. நாட்டின் அரசமைப்பை காங்கிரஸ் மாற்ற நினைக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன்பே, ஆந்திராவில் மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முயற்சித்தது காங்கிரஸ். பின்னர் நாடு முழுவதும் அதனை அமல்படுத்தவும் திட்டமிட்டது. எஸ்.சி, எஸ்.டி மற்றும் ஓபிசி ஒதுக்கீட்டில் 15 சதவீதத்தை மத அடிப்படையில் வழங்க காங்கிரஸ் திட்டமிட்டு வருகிறது.

காங்கிரஸின் மோசமான ஆட்சி நிர்வாகமும், அலட்சியமும்தான் நாட்டின் அழிவுக்குக் காரணம். தீவிரவாதம் மற்றும் நக்சல் அமைப்புகளுக்கு எதிராக பாஜக கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், அவற்றுக்கு காங்கிரஸ் ஆதரவளிப்பதோடு, அதுபோன்றவர்களை துணிச்சல்காரர்கள் என்று அழைக்கிறது. தீவிரவாதிகள் கொல்லப்படும்போது காங்கிரஸின் மிகப்பெரிய தலைவர் கண்ணீர் வடிக்கிறார். இதுபோன்ற செயல்களால் தான் நாட்டின் நம்பிக்கையை காங்கிரஸ் இழந்துவிட்டது.

வாரிசு வரி விதிக்கப் போவதாக காங்கிரஸ் சொல்லியுள்ளது. பெற்றோரிடமிருந்து பெற்ற பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறது. உங்கள் பிள்ளைகளுக்காக நீங்கள் சேர்க்கும் சொத்துக்களை காங்கிரஸ் பறிக்க நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.