தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்: அண்ணாமலை!

மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார்.

கர்நாடக மாநிலம் சிவமொக்கா நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ராகவேந்திராவை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தமிழர்கள் அதிகம் வசிக்கும் சிவமொக்கா, பத்ராவதி ஆகிய பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று காலை சிவமொக்காவில் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 5 நாட்களாக கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறேன். நான் சென்ற இடமெல்லாம், மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக உள்ளனர். தமிழகத்தில் இந்த முறை மும்முனை போட்டி நடந்தது. இதில், தமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.