பயணிகளின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!

பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் பகுதிக்கு பேருந்து ஒன்று சென்றுகொண்டு இருந்தது. பேருந்தை பாஸ்கரன் என்பவர் ஓட்ட, நடத்துனராக எடமலைபட்டி புதூரைச் சேர்ந்த முருகேசன் (வயது 54) என்பவர் பணியாற்றினார். பேருந்தில் அதிக கூட்டம் இல்லாத காரணத்தால் கடைசியில் இருந்து வலது புறமுள்ள மூன்றாவது இருக்கையில் நடத்துனர் அமர்ந்திருந்தார். பேருந்து திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தை கடந்து வலது புறம் திரும்பும் போது நடத்துனர் முருகேசன் அமர்ந்திருந்த இருக்கை திடீரென உடைந்த நிலையில், படிக்கட்டு வழியாக பேருந்தில் இருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். அதில் முருகேசனுக்கு தலையில் காயம் உண்டானது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பேருந்து கீழே விழுந்த இருக்கையுடன் பணிமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், மக்கள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். பேருந்து இருக்கை உடைந்து நடத்துனர் கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

இந்நிலையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

நேற்று முன்தினம் திருச்சி நகரப் பேருந்து சென்று கொண்டிருக்கையில் ஒரு வளைவில் நடத்துனர் இருக்கையுடன் தூக்கி வெளியே விழுந்த சம்பவம் தமிழக மக்களிடம், குறிப்பாக அரசுப் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே ஒரு சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகரப் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணி ஒருவர் கீழே விழுந்து விபத்துக்குள்ளான நிகழ்வின்போதே இனியாவது அரசு பேருந்துகளை உரிய முறையில் பராமரிப்பு செய்து, அரசு பேருந்துகளில் பயணம் செய்பவர்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்த நான் இந்த விடியா திமுக அரசை வலியுறுத்தியிருந்தேன். ஆனால் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் பொதுமக்களிடம் அரசு பேருந்து பற்றிய நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளன.

எனவே, இனியாவது இந்த விடியா திமுக அரசு விழித்துக் கொண்டு, அரசு பேருந்துகளின் ஆயுட்காலத்தை முன்பிருந்தது போல் குறைத்து புதிய பேருந்துகள் வாங்கவும், இயங்கிக் கொண்டிருக்கும் பேருந்துகளை முறையாக பராமரிப்பு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யுமாறு வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.