4 விமான நிலையங்களுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்: உச்சகட்ட பாதுகாப்பு!

கொல்கத்தா, மும்பை, டெல்லி, ஹைதராபாத் விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலைய மேலாளருக்கு இன்று காலை இமெயில் மூலம் மர்ம நபர் ஒருவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். அந்த இமெயிலில், எங்கள் குழுவினர் பெங்களூர் ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் வெடிகுண்டு வைத்துள்ளனர். ஆனால் அது வெடிக்கவில்லை, அதே நேரத்தில் கொல்கத்தா விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், 26 ஏப்ரல் 2024 வெள்ளிக்கிழமை மதியம் 12:55 மணிக்கு விமான நிலையங்கள் வெடிப்பதற்குத் தயாராக உள்ளன என்று அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்தது. இந்த வெடிகுண்டு மிரட்டலை அடுத்து நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது. விமான நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சென்னை, பெங்களூர் பன்னாட்டு விமான நிலையங்களில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை உட்பட நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் இன்று பிற்பகல் முதல் 5 அடுக்கு பாதுகாப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. விமான பயணிகள், உடைமைகள், விமானங்களில் ஏற்றப்படும் பார்சல்கள் அனைத்தும் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. உள்நாடு மற்றும் சர்வதேச முணயங்களில் இருந்து விமானங்களில் பயணிக்க வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். கூடுதல் சோதனைகள் காரணமாக உள்நாட்டு விமான பயணிகள், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகவும், சர்வதேச விமான பயணிகள் 3 மணி நேரம் முன்னதாகவும் விமான நிலையத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.