அமெரிக்காவில் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டம்: இந்திய மாணவி கைது!

அமெரிக்காவின் பிரபலமான பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயின்றுவரும் இந்திய வம்சாவளி மாணவி ஒருவர், இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் பிறந்த அசிந்தியா சிவலிங்கன் என்ற மாணவியும், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் மற்றொரு மாணவரான ஹசன் சையத் ஆகிய இருவரும் வியாழக்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் நடத்தும் வாராந்திர பத்திரிகை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் ஜெனிபர் மொரில் கூறும்போது, “பல்கலைக் கழகத்துக்குள் கூடாரங்கள் அமைப்பது என்பது விதிகளுக்கு எதிரானது. அவர்கள் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர். அதில் நிறைய மாணவர்கள் கலந்து கொண்டனர். அசிந்தியா, ஹசன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். முன்னதாக, பலமுறை மின்னஞ்சல் மூலம் பல்கலைக்கழகம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதன் பின்னரே இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த இரு மாணவர்களும் இனி பல்கலைக்கழக வளாகத்தினுள் நுழைய தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், அவர்கள் பல்கலைக்கழகத்தில் உள்ள அவர்களுக்கான தங்கும் இடத்தை மட்டும் பயன்படுத்திக் கொள்ள முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

அசிந்தியா சிவலிங்கம் பொது விவகாரங்கள் துறையில் முதுநிலை பட்டம் பயின்று வருகிறார். சையத் அதே துறையில் ஆராய்ச்சி மாணவராக இருக்கிறார். இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட நிலையில், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் கூடாரம் அமைத்து இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை அனைவரும் அதனைக் கைவிட்டுச் சென்றுள்ளதாகவும் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பயிலும் பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மாணவி ஒருவர், அவர்கள் இருவரையும் போலீஸார் கைகளைக் கட்டி கிரிமினல்கள் போல் அழைத்துச் சென்றனர் என்றார். ஆனால், பல்கலைக்கழக நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

காசாவில் இஸ்ரேல் நடத்திவரும் போரை நிறுத்தக் கோரி அமெரிக்கா முழுவதும் பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் கடந்த சில நாட்களாகவே போராட்டம் பரவி வருகிறது. நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய இந்தப் போராட்டம் பல பல்கலைக்கழகங்களுக்கும் பரவியது. ’Gaza solidarity encampment’, அதாவது காசாவுக்கு ஆதரவாக கூடாரங்கள் அமைத்துப் போராடுதல் என்ற தலைப்பில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மாணவர்கள் பாலஸ்தீன ஆதரவுக் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக போர் நிறுத்தத்தைக் கொண்டு வர வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.