அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் சஸ்பெண்ட்!

மன்னார்குடி அரசு மருத்துவமனையில், நோயாளிக்கு ட்ரிப்ஸ் செலுத்திய தூய்மைப் பணியாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அங்கு பணியில் இருந்த செவிலியர், தலைமைச் செவிலியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உள் நோயாளிகள் பிரிவில் 350 படுக்கைகள் உள்ளன. இங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு, அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் பெண் தூய்மைப் பணியாளர், ட்ரிப்ஸ் செலுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.

இதையறிந்த திருவாரூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர் திலகா, அந்த வார்டில் பணியில் இருந்த செவிலியர் சித்ராவை நன்னிலத்துக்கும், தலைமை செவிலியர் வசுமதியை வலங்கைமானுக்கும் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டார். மேலும், தூய்மைப் பணியாளர் கஸ்தூரியை 15 நாட்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.